2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் சமூகத்தோடு இணைந்து எழுச்சி பெற்ற அரசியலை மு.கா. முன்னெடுத்துள்ளது: ஹக்கீம்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ் சமூகத்தோடு இணைந்து எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் ஸ்ரீ லங்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அலிஸாஹிர் மௌலானாவை ஆதரித்து இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

'முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.

சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை, கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த ஜனநாயகப் பாதையை நாம் கிழக்கு மண்ணிலே முன்னுதாரணமாய் நிலைநிறுத்திக் காட்டியிருக்கின்றோம்.

அதனை சாணக்கியமாக தீர்க்க தரிசனமாகச் நுணுக்கமாக செய்து இந்த நெருக்கடியான ஜனநாயகக் கூட்டை பிளவுகள் இல்லாமல் முழு நாடும் பெருமைப்படக் கூடிய வகையில் கொண்டு நடத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

அடுத்து வருகின்ற அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இதற்கு முன்பு அரசாங்கத்தில் வகித்த பதவிகளை விட உயர்வான அந்தஸ்தோடு அதிகாரத்தோடு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறையாத அணியோடு பதவியில் அமரும். அப்போது இந்த ஏறாவூர் வரலாறுகாணாத அபிவிருத்தியைக் காணும்.

வேறுபாடுகளை நாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு மைத்திரி யுகத்தில் ரணில் விக்கிரமசிங்க எனும் சாதனையாளனின் வழி நடத்தலில் உலகம் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நாம் அடையவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு அமைகிறபோது அத்தனை அபிவிருத்திகளும் உங்கள் காலடிகளை நாடி வரும்.

இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10-12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்துக்கு இருந்து வந்த இருண்ட யுகம் மறைந்து விடும்.

மஹிந்த ராஜபக்ஷவின் சாஸ்திரக்காரனுக்கு நமது சிறுபான்மை இனங்கள் ஆண்டாண்டு காலம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஏனென்றால் மஹிந்தவுக்கு ஆட்சியைப் பிடிக்க ஆசை வார்த்தை காட்டி சாஸ்திரம் சொன்னதால்தான், மஹிந்த தனக்கிருந்த 2 வருட ஆட்சியையும் முன்கூட்டியே கலைத்தார்.

அதுதான் சிறுபான்மை இனங்களுக்கு விமோசனமாய் அமைந்தது.

நாட்டுப்பற்று என்ற போர்வையில் போலித்தனமான முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.

நாட்டின் வங்குரோத்து அரசியலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இப்பொழுது என்ன முகத்தோடு வந்த வாக்குப் பிச்சை கேட்கிறார்கள் என்பது வியப்பாகவுள்ளது' என குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .