2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இளைஞர்களின் பாதையை அரசியல்வாதிகள் குழப்புகின்றனர்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இளைஞர் சக்தியை, அரசியல்வாதிகள் சரியான பாதையில் செல்லவிடாமல் தடுத்துக் குழப்பவாதிகளாக மாற்றுகின்றனர்” என, ஏறாவூரில் செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா “ஷெட்” நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் முன்னெடுப்புகளில் இளைஞர், யுவதிகளின் பங்குபற்றல் பற்றி இன்று (14) கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கையில் பல்லின சமூகங்களும் இரண்டறக் கலந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

“இந்நாட்டின் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் அரசியல் மாற்றத்துக்கும் இளைஞர்களின் அர்ப்பணிப்பை யாரும் மறுதலிக்க முடியாது.

“சக்திமிக்க இவ்விளைஞர் பருவத்தில்தான் சமூகத்தில் தாங்கள் என்ன நிலையை அடையப் போகின்றோம் எனும் எதிர்காலம் பற்றிய சிந்தனை அவர்களிடத்திலே துளிர் விட்டு மலர ஆரம்பிக்கின்றது.

“இப்பருவத்தில் சரியான வழிகாட்டல்கள் கிடைக்கின்ற பட்சத்திலேயே, அவர்களின் எதிர்காலத்தை நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயக்கின்ற விதத்தில் மாற்றியமைக்க முடியும். மாறாக, தவறான வழி காண்பிக்கப்படுகின்ற போது சமூக, தேசத் துரோகிகளாகவே வெளிவருகின்றனர்.

“இவர்களை சரியான பாதையில் செல்லவிடாமல் பல சக்திகள், குறிப்பாக அரசியல் சுயநலமிகள் தங்கள் சுய இலாபத்துக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தி வருகின்றமை மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.

“இளைஞர் சக்தியை அரசியல்வாதிகள் தங்களுக்கான வரவேற்பு நிகழ்வுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் எதிரணியைத் தாக்குகின்ற காடையர் கூட்டத்திலும் வெறும் பகடைக் காய்களாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

“நாட்டின் முதுகெலும்புகளான இளைஞர் சக்தி, இவ்வாறே சிதைக்கப்பட்டு வருகின்றது.

“வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்புகள், சுய தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலும் இவ்விளைஞர்களை பின்தள்ளி தங்கள் குடும்பங்களுக்கும் சொந்த பந்தங்களுக்குமே வாரி வழங்குகின்றனர். படித்து முடித்து விட்டு தொழிலுக்கு அல்லலுறும் எத்தனையோ ஏழை இளைஞர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டும் கஷ்டப்படுவதெல்லாம் இன்னும் ஏன் இவர்கள் கண்களுக்கு புலப்படவில்லையோ? தெரியவில்லை.

“நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் தீவிர ஈடுபாட்டையும் அக்கறையையும் கொண்ட இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை தூய தலைமைத்துவத்தின்பால் ஈர்த்து சமூக அங்கீகாரம் பெறச் செய்தல் என்பது பாரியதொரு பணியாகும். இப்பணியினை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் செய்து காட்ட நாம் இளையோரைத் தயார்படுத்தி வருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .