2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுத்தமான குடிநீரின்மையால் மங்களகமவில் 900 குடும்பங்கள் பாதிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் உள்ளடங்கும் மங்களகம, கெவுளியாமடு, புளுகுணாவ, கோமகஸ்தலாவ ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமது கிராமங்கள் பல்வேறு வகையில் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் அதுபற்றி கரிசனை கொள்ளுமாறும் குறிப்பாக தமக்கு அத்தியாவசியத் தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கிராம மக்கள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமதைக் கேட்டுள்ளனர்.

இது விடயமாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆர்.பி. சுனில் பண்டார தலைமையிலான சிவில் சமூகப் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்துக்கு நேற்று (12) வருகை தந்து, தமது கிராமத்தின் குறைபாடுகளை எடுத்துக் கூறினர்.

அங்கு அப்பிரதிநிதிகள் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப் புறத்திலுள்ள தூரக் கிராமங்களான மங்களகம கிராம சேவகர் பிரிவிலும் ஏனைய கிராமங்களிலும் மிகவும் வறிய நிலையிலுள்ள பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்றார்கள்.

“எதுவித அபிவிருத்தியுமின்றி ஒதுக்குப்புறக் கிராமங்களாக இவை பின்தள்ளப்பட்ட நிலையிலுள்ளன.

“இங்கு குடிநீர்ப் பிரச்சினை மிகவும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
“சுத்தமான குடிநீர் வசதி இல்லாததால் பல குடும்பங்கள், சிறுநீரகப் பாதிப்புக்கும் ஏனைய உடல் நலக் கோளாறுகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றன.

“குழாய்நீர் விநியோகத்துக்கான வேலைகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில், இப்பொழுது மிக நீண்டகாலமாக அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

“எனவே, இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, மங்களகம மக்களுக்கு அதியாவசிய தேவையான குடிநீரைப் பெற்றுத் தருமாறும் அதன் பின்னர் குடியிருப்பு வசதிகள், வாழ்வாதார உதவிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், காட்டு யானைகளின் இடையறாத தொல்லைகளுக்கும் கிராமவாசிகள் முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பாக அமைச்சர் ஹக்கீமின் ஒத்துழைப்புடன், குடிநீர்ப் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் முன்னாள் முதலமைச்சர், மங்களகம கிராம பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .