2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிராமத்து மாணவர்களுக்கே பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள்: பெண்கள் வலுவூட்டல் ஒன்றியப் பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை உட்பட முக்கியமான பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றவர்கள்  கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களேயென  பெண்கள் வலுவூட்டல் ஒன்றியத்தின் பணிப்பாளர் திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மஞ்சந்தெடுவாய் பாரதி வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற இலங்கை உதவித் திட்டத்தின் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட மாடிக்கட்டடத்தின் முதல் மாடித்திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


பெற்றோர்கள் தமது வறுமையைக்  காரணம் காட்டாது, பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்திவிட வேண்டியது கடமையாகும். அந்த வகையில் கிராமங்களிலுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்விக்கு அதிக அக்கறை காட்டுகின்றனர்.
பிள்ளைகளின் கல்வியை பறிப்பதற்கான உரிமை எந்தப் பெற்றோருக்கும் இல்லை. நமது நலன்களுக்காக வேலைகளில் ஈடுபடுத்துதல், வீடுகளில் வேலைகளில் ஈடுபடுத்துதல், போன்றவற்றில் ஈடுபடுவது தவறாகும். இவ்வாறு பிள்ளைகளின் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள்.


எங்களது வசதிகளுக்கு அப்பால் பிள்ளைகளுக்காகச்  செலவிடுவதற்கு அனைத்து பெற்றோர்களும் தயாராக வேண்டும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி நல்லவற்றைச் செய்தாலும் இன்ரர்நெற், ஈமெயில் என தேவையற்ற விடயங்களில் பிள்ளைகள் ஈடுபட்டு பாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. எனவே அவற்றிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களது கடமையாகும்.   


வித்தியாலய அதிபர், எஸ்.அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற புதிய கட்டத்  திறப்பு விழா, பெற்றோர் தின விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X