2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பருவகால பாதிப்புக் குறைபாடு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

வெயில், மழை, காற்று, பனி என்று, பருவகால மாற்றங்களின்போது சுற்றுப்புற தட்பவெப்பநிலை மட்டும் மாறுவதில்லை. அதற்கு ஏற்றவாறு, நமது மனநிலையும் மாறுகிறது. அந்தக் குறிப்பிட்ட பருவநிலையில் ஆண்டுதோறும் நமக்கு மனச்சோர்வு அல்லது மன எழுச்சி என்பன சற்று அதிகமானால், அதை நாம், பருவகால பாதிப்புக் குறைபாடு என்று சொல்கிறோம்.

Seasonal Affective Disorder, பெரும்பாலும் பூமத்திய ரேகையில் இருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களையே பாதிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில், குளிர்காலத்தில் இதனால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதை Winter Blues அல்லது குளிர்கால மன அழுத்தம் என்றும் சொல்வதுண்டு.

SAD குறைபாடு இருக்கும் குடும்பப் பின்னணி கொண்டவர்களை, இது அதிகம் பாதிக்கிறது. குளிர்காலத்தில் தோன்றும் விட்டமின் D குறைபாடும், இந்த வகை மன அழுத்தத்துக்கு ஒரு காரணமாக உள்ளது. வெயில் வரத் தொடங்கியதும், SAD பிரச்சினை உள்ளவர்களின் மனநிலையும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

அதேபோல், வெயில் அதிகம் கொண்ட நாடுகளில் ஏற்படும் Seasonal Affective Disorder, வெயிலின் உக்கிரம் குறைந்தபிறகு சரியாகிவிடும். இந்தக் குறைபாடு, ஆண்களை விடப் பெண்களை நான்கு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும், இக்குறைபாடு இளம் பெண்களிடையே தான் அதிகமாக காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி உணர்வது?

எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது, மனம் எப்பொழுதும் சோகமாக இருப்பது, தூக்கமின்மை மற்றும் பகல்நேரத் தூக்கம், உடல் சோர்வடைதல், கவனக் குறைபாடு, மாச்சத்துள்ள உணவுப் பண்டங்களை விரும்பி உண்ணுதல், யாரிடமும் பேசப் பிடிக்காமல் தனிமையை நாடுதல் ஆகிய யாவும் இக்குறைபாட்டின் அறிகுறிகளாக உள்ளன.

இந்தக் குறைபாட்டின் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், மனநல மருத்துரை அணுகி அதை உறுதிபடுத்திக் கொண்டு, தகுந்த சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டால், மனச்சோர்வில் இருந்து விடுபட்டு, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம்.

இந்த மனச்சோர்வுக்கு, மற்ற வகை மனச்சோர்வைப் போல் மருந்துகள், CBT therapy (Cognitive behavior therapy), Psychotherapy மட்டுமல்லாது, Phototherapy சிகிச்சையும் Vitamin-D சிகிச்சையும் நல்ல பலன் அளிக்கும். நம்மில் சிலருக்கு, இந்த வகை மனச்சோர்வு இருந்தும் அதை அறியாமையால் அலட்சியப்படுத்துவதால், நாம் தேவையில்லாமல் அதன் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

உடலில் இரும்புச்சத்துக் குறைந்து நமக்கு இரத்தசோகை ஏற்பட்டால், அச்சத்துள்ள Iron மருந்துகளைச் சாப்பிடுவதில்லையா? அதுபோலதான், நம் மூளையில் உள்ள Serotonin, Nor-epinephrine போன்ற நரம்பியக் கடத்திகளின் குறைபாட்டால் நமக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. அதற்குரிய மருந்தை எடுத்துக் கொண்டால், அக்குறைபாடு நீங்கி இயல்பாக வாழலாம்.

இந்த மருந்துகளை, மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

- க.கதிரவன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .