2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் குடிநீர், மின்சாரமின்றி மக்கள் அவதி

Kogilavani   / 2017 மே 30 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிவாணிஸ்ரீ, மொரிஸ் என்டனி

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி, மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இரத்தினபுரி நகர பிரதேசங்களை அண்மித்த பகுதிகளுக்கு இரத்தினபுரி மாநகர சபையின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, மேற்படி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால், மக்கள் தத்தமது வீடுகளை சுத்தம் செய்து வருகின்றபோதிலும், அவர்களுக்கு தேவையான நீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்கள், இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக, பிரதேச செயலகங்கள் தெரிவித்துள்ளன.

இப்பிரதேசங்களிலிருந்து வெளியேறியுள்ள மக்கள், தொடர்ந்து இடைதங்கள் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச செயலகங்கள் மேலும் கூறின.

எலப்பாத்த பிரதேச செயலகப் பிரிவில் தம்புல்லுவன, திமியாவ, இரத்தெல்ல, பலிபத்கொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்னும் நீரில் மூழ்கியவாறே காணப்படுகின்றன. இங்கு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இ/எலப்பாத்த மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

அயகம பிரதேச செயலகப் பிரிவில் கலத்துற, கீழ் கலத்தற ஆகிய பகுதிகளிலும் கிரியெல்ல பிரதேசத்தில் வடக்கு கரந்தன பகுதியும் இன்னும் நீரில் மூழ்கியவாறே காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் மூலமும் பிரதேச

செயலாளர்களின் மேற்பார்வையின் கீழும் உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், நிவாரண பொருட்கள், ஹெலிகொப்படர் மற்றும் படகுகளின் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை செஞ்சிலுவை சங்கம், சாந்த ஜோன்ஸ் எம்பியுலன்ஸ் சேவை, லீட்ஸ் ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. இரத்தினபுரி நகரசபை பிரிவில் பாதிப்புக்கு உள்ளானோருக்கு, இரத்தினபுரி மாநகர ஆணையாளர் நிரஞ்சன் ஜயக்கொடியின் எற்பாட்டில் சமைத்த உணவு பொதி வழங்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .