2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“இரத்தினபுரி மாவட்டச் செயலாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவும்”

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

 

இரத்தினபுரி மாவட்டச் செயலாளர், தனது கடமைகளை மறந்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள, சப்ரகமுவ மாகாண அமைச்சர் ரஞ்சித் பண்டார, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“சப்ரகமுவ மாகாணத்தில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாகாணசபை பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. இது யாவரும் அறிந்த விடயமே. எனினும், இதனை சரியாக புரிந்துகொள்ளாத இரத்தினபுரி மாவட்டச் செயலாளர், சப்ரகமுவ மாகாண சபையை மறந்து செயற்பட்டு வருகின்றார்” என்றும், சப்ரகமுவ மாகாண  அமைச்சர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம்,  சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர்  இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“சப்ரகமுவ மாகாணத்தில், இயற்கை அனர்த்தங்களினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாகாண சபை பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. இது தொடர்பில் ஆராயும் விசேடக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த 29ஆம் திகதி, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாகாண சபை மக்களுக்கு செய்த சேவைகளை, மாவட்டச் செயலாளர், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றிருக்க வேண்டும். எனினும் அவர் அதனை செய்யத் தவறிவிட்டார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், பின்னர் தான் எழுந்து நின்று அதனை தெளிவுபடுத்தினார்.  

மாகாண சபை செய்து வரும் சேவையை மறந்துவிட்டு, மாகாண சபையை தரங் குறைவாக எண்ணி செயற்பட்டு வரும் இரத்தினபுரி மாவட்ட செயலாளரின் நடவடிக்கை, எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாதது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாகாண சபையை மறந்து செயற்படுவதாக இருந்தால்,  மாகாண சபை என்ற ஒன்றுத் தேவையில்லை. அதை இல்லாமல் செய்யலாம்.

மாவட்டத்துக்கு பொறுப்புக் கூறக்கூடிய மாவட்டச் செயலாளர் இப்படி நடந்து கொள்வது ஏன்? இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .