2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்: திகா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்,ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

'தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐந்து வருடத்தில் 50,000 வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என்ற என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவேன்' என தமிழ் முற்போக்கு கூட்டணியின்  உப  தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'அமைச்சப் பதவியை பொறுப்பேற்றதன் பின்பு, முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் கூறினார்.

புசல்லாவை, வெதமுல்லை, அக்கரப்பத்தனை, லிந்துலை, மெராயா, டயகம, மன்றாசி, போடைஸ், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கெம்பியன், மஸ்கெலியா, சாமிமலை உட்பட பலபகுதிகளில் இடம்பெற்ற வரவேற்பு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;.

அங்கு  தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசாங்க ஊழியர்கள் உட்பட சகலரும் சுதந்திரமாக செயற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மலையகத்தில் மீண்டுமொரு அராஜக நிலை  ஏற்பட நாம் இடமளிக்கமாட்டோம்;. தேர்தலில் எனக்குக் கிடைத்த வெற்றி மலையகத் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தையும் விடுதலையையும் ஏற்படுத்தியுள்ளது' என்றும் அவர் கூறினார்.

'நுவரெலியா மாவட்ட மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து  எம்மை வெற்றிபெறச் செய்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் சேவையாற்றும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எவ்விதமான பாரபட்சமுமின்றி நாம் மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்வோம்.
மலையகத்தில் இனி அராஜக ஆட்சி நடக்காது. கடந்த காலங்களில் மலையக மக்களை மரியாதை குறைவாக பேசியவர்களை போன்று நானும்; பேச மட்டேன். மலையகத்தில் இனி அரசியல் ரீதியாக பழி வாங்குதல் நடக்காது.

75 வருடங்களாக அரசியல் செய்தவர்கள், 30 வருடங்களாக அமைச்சு பதவிகளை வைத்திருந்தவர்கள் மக்களுக்கு அபிவிருத்தி உட்பட பல வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்தவில்லை.
 
மலையகத்தில் தனிவீடு திட்டம், பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் பேட்டை அமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவுள்ளோம்'  என்றார்.

தேர்தலின் போது நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். எமக்கு கிடைக்கவுள்ள அமைச்சுக்கள் மூலம் விட்டுக்கொடுப்புகளுடன் மக்களுக்கு நேர்மையாக பணியாற்றுவோம்' என அவர் மேலும் கூறினார்.   

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X