2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்ட விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மலர்வேந்தன்  

'வரவு-செலவு திட்டத்தில் கூறப்பட்டது போன்று, சகல தனியார்;துறை ஊழியர்;களுக்கும் இம்முறையாவது   2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டிய சட்டவிதி முறைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை முதலாளிமார் சம்மேளனமோ அல்லது தனியார் முதலாளிகளோ    சாக்குபோக்கு கூறி  காலத்தை கடத்திவிடுவர்' என 'நல் ஆட்சி' அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கை தொடர்பாக ஐக்கிய தோட்டத்  தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர்; ஆ.முத்துலிங்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியதாவது,

தோட்டங்களில் 160,000 குடும்பங்கள் இன்னும் பழைய லயன் அறைகளிலே வாழும் துர்பாக்கிய நிலை உள்ளது. இதிலிருந்து இவர்களை மீட்டெடுக்க அந்த மக்களின் வீடமைப்புத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு-செலவு திட்ட உரையில் நிதி அமைச்ர் அவர்களால் தெரிவிக்கப்பட்டமை வரவேற்க வேண்டிய விடயமாகும்.

கொஸ்லாந்தை, மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவில பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இன்னும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அதேபோல அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுவரும் மண்சரிவு அபாயத்தினால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் வீடு வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அத்தோடு தோட்ட லயன்களில் வாழும் சகல  மக்களும் சொல்லொன்னாத் துன்ப துயரங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அத்தோடு தோட்ட மக்களுக்கு  வழங்கும் 7 பேர்ச் காணி வீட்டுத் திட்டமும் ஒரு 'நவீன லய முறையாகத்தான்  இருக்க  முடியுமே தவிர கிராமமாக அமைய முடியாது. தோட்ட மக்களின் குடியிருப்பு  முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமேயானால் மக்களின் வாழ்வதாரத்துக்கும் ஏனைய வசதிகளுக்கும் போதுமானதாக  அமைய கிராமிய அடிப்படையில் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்குறைந்தது 20 பேர்ச் காணியில் வீடு அமைக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் 25 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100  நாள் வேலைத்திட்ட 74 வது சரத்தில் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்திச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதுடன் இதற்காக தனி அமைச்சும் உருவாக்கப்பட்டது. ஆனால் விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்திச் செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகையால், தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளுக்கு போதிய விஞ்ஞானம்  போன்ற முக்கிய பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்களையும் வளங்களையும் வழங்க நடவடிக்கைகள் அவசியமாகும்.

அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு இரண்டு வருட வரிச்  சலுகையை வரவு-செலவு திட்டத்தில் வழங்கியுள்ளதால்; தோட்டங்களை முறையாக அபிவிருத்திச் செய்தல் மற்றும் உத்தியோகத்தர்; தொழிலாளர் ஆகியோர்களின் சேமநலங்களையும் கண்கானிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .