2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு

எஸ்.சதிஸ்   / 2017 மே 29 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, ஆல்டி கீழ்பிரிவுத் தோட்டத்தில் உயிரிழந்த, 17 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில், அச்சிறுமியின் உடற்பாகங்களை, இரசாயனப் பகுப்பாய்வுக்காக, கொழும்பு இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.   

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த உபேந்திரன் சுபா என்ற மேற்படி சிறுமி, உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே அவர் உயிரிழந்திருந்தாக, வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.   

சிறுமியின் உடல் முழுதும், சிகரெட்டினால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் அவரது கைகள் மற்றும் கால்களில் எரிகாயங்கள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.  

மனநலம் பாதிக்கப்பட்ட இச்சிறுமி, உடல்நலக்குறைப்பாடு காரணமாக, ஏற்கெனவே பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றிருந்தார்.  ஆனால், அப்போது சிறுமியின் உடலில் இவ்வாறான காயங்கள் காணப்படவில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

சிறுமியின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் அங்கிருந்து அவரது உடற்பாகங்கள் சில, பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  

சிறுமியின் சடலம், நேற்று நல்லட்டக்கம் செய்யப்பட்டதுடன் தேவையேற்படின், சடலம் மீண்டும் தோண்டடியெடுக்கப்படலாம் என்று, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ​பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .