2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வலய பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும்

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஹட்டன், கல்வி வலயப் பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கோரியுள்ளார்.

ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளராக தன்னை நியமித்தமைக்கு சிபாரிசு வழங்கிய அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், தன்னுடைய பணி எது என்பதை மறந்து, ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளர் அரசியல் கடமைகளில்  ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் என்ற வகையில், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பிளக்வோட்டர் பாடசாலைக்கு நான் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தேன்.

குறித்த பாடசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. பாடசாலையில் கட்டட வசதியின்மை, குடிநீர் வசதியின்மை, கடந்த 10 வருடங்களாக, பாடசாலையின் அதிபர் விடுதியை தனியார் ஒருவர் கையகப்படுத்தியுள்ளமை, கடந்த ஒரு வருடமாக பாடசாலையை மேற்பார்வை செய்வதற்காக கல்வி பணிமனையிலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் அப்பாடசாலைக்கு விஜயம்செய்யாமை போன்ற பல உண்மை விவரங்களை நான் இதன்போது அறிந்துக்கொண்டேன்' என்றார்.

 'இதனால், என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலைக்காக, குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டேன். அதன்பின்னர், குறித்த பாடசாலையின் தற்போதைய நிலைக் குறித்து, ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளருக்கும் அறிவித்தேன்.

வலயப் பணிப்பாளர், மறுதினம் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு என்னைப்பற்றி விமர்சித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்' என மேலும் கூறினார்.

'அவரது கருத்துக்கள் யாரோ ஓர் அரசியல்வாதிக்குக் காவடி தூக்குவது போலுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில்,  மக்கள் பிரதிநிதிகளை விமர்சிக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது' என அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரிய வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தகுதியான கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு மத்திய மாகாண முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், தன்னை விமர்சித்தமை தொடர்பில் தாபன விதிக்கோவைக்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X