2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமுர்த்திக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் உயர்த்தப்படும்: சஜித் பிரேமதாச எம்.பி.

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சமுர்த்தி உதவி பெறும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் வாழ்வாதாரம் வழங்கப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டி பூஜாபிட்டிய நகரில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 161 ஆசனங்கள் இருக்கின்றன. இலங்கை அரசியலில் இது ஒரு பெரும் சக்தி. ஆனாலும் இச்சக்தியை பயன்படுத்தி அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவி;ல்லை. அவர்கள் செய்தது ஜனாதிபதியின் காலத்தை அதிகரித்தது மட்டுமே. இது அவர்களுடைய சுயநலத்திற்காகவே செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இச்சட்டத்தின் பயன் ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும்.

இன்று நாடு பூராகவும் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் அண்மையில் கட்சி மேற்கொண்ட திருத்தங்களாகும். புதிய எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஐ.தே.க.வை  ஆதரிக்கின்றனர். மக்களின் இந்த எதிர்பார்பை நாம் நிறைவேற்றுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் இந்நாட்டிக்கு பெரும் சேவையாற்றிவுள்ளனர். டீ.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, ஜே.ஆர்.ஜயவர்தனா, எனது தந்தை ஆர்.பிரேமதாசா, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்றோர் செய்த சேவைகள் இன்றும் நாட்டிலுள்ளது. ஜே.ஆர் ஜயவர்தனா, தனது ஆட்சியில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி நாட்டை சுபீட்சம் அடையச் செய்தார். லலித் அத்துலத்முதலி மஹபொல புலமை பரிசில் திட்டத்தை ஆரம்பித்து வறிய மாணவர்களுக்கு உயர் கல்வியை பெறுவதற்கு வாய்ப்பளித்தார். முப்பது வருடங்கள் தேவை என்று கூறிய மஹாவலித் திட்டத்தை காமினி திஸாநாயக்கா ஆறு வருடங்களில் செய்து முடித்தார். எனது தந்தை ரணசிங்க பிரேமதாச 15 இலட்சம் வீடுகளை கட்டி வறிய மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்த்தார். ஜனசவிய திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 2500 ரூபாய் வழங்கினார். அந்த வகையில் தற்பேதைய அரசாங்கம் ஏழை மக்களை சுமையாகவே கருதுகிறது. ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி வறிய மக்களை சுமையாக அல்ல ஒரு சக்தியாகவே கருதுகிறது. எனவே, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எமது கடமையாகும்.

இந்நாட்டில் வெகு விரைவில் மீண்டும் பிரேமதாச யுகமொன்று உருவாகும். அப்போது சமுர்த்தி உதவி பெறும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10,000; ரூபாய் வாழ்வாதாரம் வழங்கப்படும் என்றார்.  கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .