2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இடைக்கால வரவு-செலவு திட்டம் நடுத்தர மக்களுக்கான வரப்பிரசாதமாகும்: ஸ்ரீதரன்

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக  ஆசிரிய சமூகம் எதிர்பார்த்திருந்த சம்பள அதிகரிப்பு புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஆத்ம திருப்தியுடன் பணிபுரியக் கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீPதரன் தெரிவித்தார்.


ஷட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ். நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  சாரணர் இயக்க மாணவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தசீருடைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,


புதிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பொருட்களின் விலை  குறைப்பானது  நடுத்தர வர்க்கத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும், பொருளாதார வசதி குறைந்த சாதாரண மக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறிக்கப்பட்டுள்ளன. மின்சார வசதி இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவும் வகையில் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


மேலும், ஆசிரிய சமூகம் எவ்வளவோ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு சரியான சம்பள உயர்வு கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தார்கள். இந்நிலையில் இடைக்கால சம்பள உயர்வானது ஆசிரிய சமூகத்துக்கு தகுந்த நேரத்தில் வழங்கப்பட்ட ஒன்றாகும். இது இருபது வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த பெரிய அளவிலான சம்பள உயர்வுமாகும். எனவே, ஆசிரியர்களும் அதிபர்களும் முன்னரை விட அக்கறையுடனும் ஆத்ம திருப்தியுடனும் தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


அத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் தமது கஷ்டங்களில் இருந்து ஓரளவு விடுபட்டு பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டவும் சந்தர்ப்பபம் ஏற்;பட்டுள்ளளது.


கடந்த காலங்களில் மலையகப் பாடசாலைகள் அரசியல் மயமாகவே காட்சி தந்து வந்துள்ளன. ஒரு சிலரைத் தவிர ஏனையவர்களிடமிருந்து வளங்களைப் பெற்றுக் கொள்வதில் அதிபர்கள் தயக்கம் காட்டி வந்துள்ளார்கள்.


எனினும் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட வழிகாட்டல் காரணமாக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சாரணர்களுக்கான சீருடைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது.


அதேபோல், சாரணர்கள் விழுமியக் கல்வியோடு ஒழுக்கம், விழுப்பம், ஒப்புரவு முதலானவை ஒருங்கே கிடைப்பதால் நாட்டின் நற்பிரஜைகளாக மிளிர வேண்டும் என மாணவர்களை வாழ்த்துகின்றேன் என அவர் தெரிவித்தார்.
சாரணர் இயக்கப் பொறுப்பாசிரியை திருமதி ஷோபனா ஏற்பாடு செய்திருந்தார். ஹட்டன் கல்வி வலயத்தின் சார்பில் ஆசிரிய ஆலோசகர் என். பாலமோகன் கலந்து கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X