2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை

Kogilavani   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ


ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததையடுத்து கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.


சப்ரகமுவ மாகாணசபையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை(10) சபை தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அறிகையின் பிரதியை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தொடர்ந்து உரையாற்றுகையில்,


'கேகாலை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர்களையும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அல்லாதவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.


தேர்தலையடுத்து ரம்புக்கனை நகரில் தொடர்ந்து தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. கசிப்பு மற்றும் போதைப்பொருள்  வியாபாரம் உட்பட தீயசெயல்களில் ஈடுபடும் விசமிகளே இவ்வாறு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.


மேற்படி விசமிகள்; தேர்தல் காலங்களில் மக்களை கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


அத்தோடு கேகாலை மாவட்டத்தில் அரச அலுவலகங்களுக்குள் இனந்தெரியாத விசமிகள் பலவந்தமாக உட்புகுந்து அங்கு கடமைகளில் இருக்கும் அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றனர். இவர்களின் தலையீடு காரணமாக கேகாலை மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் சட்டத்துக்கு விரோதமான செயல்களும் இடம்பெற்று வருகின்றது.


குறிப்பாக ரம்புக்கன பொதுச்சந்தை, பிரதேசசபையின் வியாபார சந்தை கட்டடத்தொகுதி, பின்னவலயானைகள் சரணாலயம் உட்பட மாவனல்ல, யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் சட்ட விரோதமான செயல்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிறுவனங்களின் பொருப்புக்களையும் விசமிகள் கைபற்றியுள்ளனர்.


அத்தோடு நோய்வாய்ப்பட்டுள்ள மாகாண அமைச்சர் ஸ்ரீலால் விக்கிரமசிங்கவை அவரின் வீட்டுக்கு சென்று விசமிகள் தாக்கியுள்ளனர்.


எனவே, மேற்படி சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளேன்'என முதலமைச்சர் மஹபால ஹேரத் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .