2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விசேட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்: திகா

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

'பெருந்தோட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் நகர் புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளையும் விசேட அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  

ஹட்டன் காமினிப்புற பகுதியில் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் செயலாளர் ஜுவன் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பிரசாக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் உறுதிபூண்டு ஜனாதிபதி தேர்தலில்  வாக்களிக்க தீர்மானித்தபோது மலையக மக்களும் இணைந்து வாக்களித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நாங்கள் அமைச்சரான பிறகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மலையகத்தில் தனிவீட்டுத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ளவும் பிரதமர் தயாராக உள்ளார்.  கடந்த ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்திருந்த கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.

அந்தவகையில் மலையக பெருந்தோட்ட மற்றும் நகர் புற, கிராமப் புற வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நலன் கருதி பிரதேசத்துக்கு  ஏற்ற விதமான வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க எண்ணியுள்ளேன். அரச, தனியார்துறை ஊழியர்கள் தோட்ட உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு துறையினரின் வாழ்வியல் அபிவிருத்திக்கு தகுந்த திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எனவே மலையக மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் ஏற்பட யானைச் சின்னத்துக்கு வாக்குகள் அளித்து எம்மை வெற்றிபெறச் செய்யுங்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .