2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வட்டவளையில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில்  வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பம் தொடர்பாக தெரியவருவதாவது, 

நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும்  ஓட்டோவொன்றில், சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர். 

எனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, நேற்று (12) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாக, பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில்,  தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்றுவிட்டதாக  8 வயது இளைய பேரன்  வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து, உடனடியாக சிறுவனின் தாயான உயிரிழந்த பெண்ணின் மருமகள் வட்டவளை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மூத்த பேரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வீட்டுக்கு பின்புறத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் தாயின் சடலத்தை போட்டு மூடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற வட்டவளை பொலிஸார், 81 வயதான பெண்ணின் சடலத்தை மீட்டதுடன், நீதவானின் உத்தரவுக்கு அமைய, பெண்ணின் மரணம் கொலையா அல்லது இயற்கையானதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலத்தை துணியால் சுற்றி பாழடைந்த கிணற்றுக்குள் வீசி, சடலத்தை மீட்க முடியாதவாறு பாரிய கற்களை அதன்மீது வீசியிருந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சந்தேக நபர்கள அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது, கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .