2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீதவானின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பு

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

சட்டத்தரணிகள் சிலரின்  முறையற்ற செயற்பாடுகளுக்கு  எதிராக, நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரனகமகே தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், நேற்று வெள்ளிக்கிழமை(27) பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டனர்.

இதன் காரணமாக வழக்குகளுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரனகமகே,  திறந்த நீதிமன்றில் வியாழக்கிழமை (26)  இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, சட்டத்தரணிகளின் முறையற்ற செயற்பாடுகள்  சிலவற்றைக் குறிப்பிட்டு, இதன் காரணமாக நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும், தனக்கெதிராக  சிலர் 'அநாமதேயக் கடதாசி'   எழுதியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டாரவிடம் சட்டத்தரணிகள் முறையிட்டு பிரதான நீதவானுடன் இது தொடர்பாக பேசுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆயினும் பிரதான நீதவான் இதனை புறக்கணித்ததாக தெரிய வருகிறது.

இதனையடுத்து, நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் வழக்குகளுக்கு ஆஜராகவில்லை. ஆயினும் முதலாம் இலக்கம், இரண்டாம் இலக்கம் ஆகிய மன்றுக்களில் நீதவான்கள் வழக்கு விசாரணைகளை நடத்தினர்.

இது தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் நேற்று மாலை சட்டத்தரணிகள் முறையிடவுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

இதேவேளை, சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகாததை அடுத்து வழக்குகளுக்கு வந்த பொது மக்களும் விசாரணைக் கைதிகளும் ஏமாற்றமடைந்தனர். அத்துடன் மன்றில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .