2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இலங்கை சுகாதாரத் துறையின் தரம் உயரும்’

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு, தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

மேலும், “இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று (20) காலை நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“சுகாதாரத் துறையில் மிகவும் முக்கியமான பிரிவான மருத்துவ ஆய்வுகூட சேவையிலுள்ள தொழில் வல்லுநர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்வதற்குத் தேவையான வழிகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.  

மேலும், இலங்கை சுகாதார சேவையின் தரம் காரணமாக, சர்வதேசத்தில் எமது நாட்டுக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் மக்களின் கௌரவம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.  

கடந்த காலத்தில் நாடெங்கிலும் டெங்கு நோய் பரவிய சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை சேவையைத் துரிதப்படுத்தி மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்கள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.  

இலவச சுகாதார சேவையைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப சுகாதாரத்துறையின் தரத்தையும் நியமங்களையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

இதன்போது, சிறந்த சேவையை வழங்கிய மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுநர்களைப் பாராட்டி ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டன.  

இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X