-எம்.இஸட். ஷாஜஹான்
ஆண் மாணவர்கள் அறுவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு, நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசியங்க எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (6) உத்தரவிட்டார்.
அமன்தொழுவ – சீதுவை இடைப்பட்ட பிரதேசத்தில் தற்காலிக குடில் ஒன்றை அமைத்து தங்கியிருந்த தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அப்பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் 12 - 13 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களாவர். சந்தேக நபர் தான் தங்கியுள்ள இடத்திற்கு பல்வேறு காரணங்களை கூறி சிறுவர்களை அழைத்து செல்லிடத் தொலைபேசி மற்றும் பழங்கள் என்பவற்றை கொடுத்து அந்த சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தேரர் தங்கியுள்ள இடத்திற்கு தற்செயலாகச் சென்ற நபர் ஒருவர் இரு சிறுவர்களும் தேரரும் நிர்வாணமாக இருப்பதை கண்டுள்ளார். பின்னர் இது தொடர்பில் பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வகுப்பாசிரியை மாணவர்களை விசாரித்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து சீதுவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்செய்தபோதே, நீதவான் சந்தேக நபரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.