2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிந்துப்பிட்டி விவகாரம்; வேறு மயானத்தில் உடல் தகனம்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புத்தூர் மேற்கு - சிறுப்பிட்டி, கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலைத் தகனம் செய்ய வந்தவர்களை, வல்லை மண்டான் மயானத்தில் அவ்வுடலைத் தகனம் செய்யுமாறு, மல்லாகம் நீதமன்றம் கட்டளை பிறப்பித்தது.

சிறுப்பிட்டியை சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை, கிந்துபிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது, குறித்த மாயனத்தைச் சூழவுள்ள மக்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் அப்பகுதியில், நேற்று (27) பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரு தரப்பினரிடமும் பொலிஸார் பேச்சுக்களை நடத்திய போதிலும், இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வராத நிலையில், இரு தரப்பையும் சேர்ந்த நால்வரை, மல்லாகம் நீதிவானிடம் அழைத்துச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிவான், சடலத்தை எரிக்கவிடாது எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை சேர்ந்த நால்வரையும் கைதுசெய்ய உத்தரவிட்டதோடு, சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை, வேறு மயானத்தில் அவ்வுடலைத் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

அதனை அடுத்து, மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தைத் தகனம் செய்ய வந்திருந்தவர்கள், சுமார் நான்கரை மணித்தியாலம் காத்திருந்த நிலையில், நீதிமன்றக் கட்டளையை அடுத்து, வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலைத் தகனம் செய்தனர்.

குறித்த சுடலையில் தகனம் செய்யக்கூடாது என, சுடலையை சூழவுள்ள மக்கள், கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், சுடலையில் உடலத்தை தகனம் செய்துவரும் தரப்பினர், அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இரண்டு வருட காலமாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகத , "மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ, அந்தத் தரப்புக்கு எதிராகப் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று, மல்லாகம் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .