2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நல்லிணக்கத்தை உருவாக்க சி. ம. வியை மீள ஆரம்பிக்க வேண்டும்

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

வடக்கில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மீண்டும் உருவாக்க  சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென, அப்பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில், இன்று (26) நடைபெற்ற சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின்போதே, அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினர்.

சுமார் 30 வருடங்களின் பின்னர், பல மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஒன்று கூடிய சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

இதன்போது கருத்துரைத்த பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், தமிழ் – சிங்கள - முஸ்லிம் என மூவின மாணவர்களும் இந்தப் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளனர்.இதன்போது, மூவின மாணவர்களும் கல்வி பயிலும் போது, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன், கல்வியை கற்றதாகவும் சுட்டிக் காட்டினார்கள்.

மாணவ பருவத்தில் இருந்த போது, இன, மத வேறுபாடுகளை தோற்றுவிக்காததுடன், யார் எந்த இனத்தவர்கள் என்று தெரியாத அளவுக்கு இப்பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளை தாம் முன்னெடுத்ததாகவும் கூறினார்கள்.

எனவே, “வடக்கு மாகாணத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த, சிங்கள மகா வித்தியாலயம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சிங்கள மகா வித்தியாலயத்தை மீளவும் இயக்குவதற்காக, சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசியதை காணமுடியவில்லை.

“நல்லிணக்கத்தை உருவாக்க முதன்முதலில் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக  முன்னர் இயங்கிய இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என தெரிவித்தனர்.

“நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், பாடசாலை எரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வந்த போது, பாடசாலையை விட்டு வெளியேறினோம்.

“மீண்டும் இப்பாடசாலையை ஆரம்பித்து எமக்குள் இருந்த ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் - சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.

வடக்கிலும் அந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தானாகவே உருவாகும்” என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .