2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார்.

மீள்குடியேற்ற அமைச்சால் அமைக்கப்படவிருந்த இந்த பொருத்து வீடுகள் ஒவ்வொன்றும் தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை. இந்த பொருத்து வீடுகள் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத மற்றும் தரமில்லாத வீடுகள் என வடமாகாண சபையால் நிராகரிக்கப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இழுபறி நிலையில் இருந்த இந்த வீட்டுத்திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .