2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

2.மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது

George   / 2016 மே 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முகாமை செய்து தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் அதிகார சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் பொதுநூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,  வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். தமது மாவட்டங்களிலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எமக்கு தெரிவித்திருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வித்தியாசமான பிரச்சனைகள் உண்டு.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தெற்கில் இருந்து வரும் மீன்பிடியாளர்கள் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. 
தெற்கில் இருந்து மீன்பிடிப்பதற்கு முல்லைத்தீவுக்கு வருவதாக முன்னைய அமைச்சரால் 78 பேர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்போது  300 க்கு மேற்பட்ட மீனவர்கள் அங்கு வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மன்னார் மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளால் பிரச்சனை. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவில், கடற்படையினரால் ஏற்படும் பிரச்சனைகள். யாழ் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் என பல விடயங்கள் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. 

இவ் விடயங்கள் தொடர்பாக பரிசீலுப்பதற்கு முதலமைச்சரின் செயலாளர், மீன்பிடி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்களை உள்ளடக்கி பேராசிரியர் சூசை ஆனந்தனின் ஆலோசனையின் கீழ் ஒரு குழு அமைத்து மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை உள்ளடக்கி அவற்றின் அதிகாரங்கள் தொடர்பாக பேராசிரியரிடம் இருந்து அறிக்கை ஒன்றைப் பெறவுள்ளோம். 

அதனைத் தொடர்ந்து வடமாகாணத்துக்குரிய அதிகார சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த அதிகார சபைக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கினால் இவை தொடர்பான அதிகாரங்கள் முகாமைத்துவங்கள் அனைத்தும் மேற்குறித்த அதிகார சபையின் கீழ் இருக்கும். மற்றவர்களின் உள்ளீடுகள் இல்லாமல் போகும் எனவே அதற்குரிய ஏற்பாடுகள் விரைவில் நடைபெறவுள்ளன. 

மேலும் இந்திய இழுவைப்படகுகளின் பிரச்சனை மத்திய அரசுக்குரியது. அது தொடர்பாக விரைவில் மத்திய அரசுடன் பேசி நடைமுறைச்சாத்தியம் உள்ள தீர்வு ஒன்றினை பெறுவோம் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .