2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவுநாள் நிகழ்வுகள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டிலேயே தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ள யாழ். மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், திலீபனின் நினைவிடத்தை சூழ வேறு நிகழ்வுகள் இடம்பெற அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தியாக தீபம் தியாகி திலீபன் தனது மக்களின் விடுதலைக்காக தனது அகிம்சா ரீதியான போராட்டத்தை நிகழ்த்திய நல்லூர் மண்ணும் அவர் தனது உயிரை தனது மக்களுக்காக ஆகுதியாக்கிய மண்ணும் யாழ். மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கின்ற காரணத்தால் அன்றுமுதல் இன்றுவரை யாழ். மாநகரசபை தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவப்படுத்துவதிலும் அவருக்கான நினைவாலயம் அமைப்பதிலும் வருடாவருடம் அவரை நினைவுகூர்வதையும் தனது பொறுப்பிலேயே நிகழ்த்தி வருகின்றது.

அண்ணன் தியாக தீபம் தியாகி திலீபன் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்கானவர் மாத்திரமல்லர், அவர் அகிம்சா ரீதியாகப் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமுரியவர். அவர் ஒரு கட்சிக்கோ ஒரு இனத்துக்கோ உரியவர் அல்ல மாறாக விடுதலை வேண்டிய அனைவருக்குமானவர். தேசியத் தலைவர் தியாக தீபம் திலீபனை தனது மகன் என்று விழித்துப் பேசியிருக்கின்றார். தனது போராட்டம் தமிழ்பேசும் மக்களுக்கானது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறான ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் வழிவந்த ஒரு தியாகியை நினைவுகூர்வதில் எவ்வித பேதங்களும் பாராட்டப்படக்கூடாது.

எல்லாவிதமான முரண்பாடுகளையும் களைந்து தமிழ்பேசும் மக்களாக எதிர்வரும் 2018 செப்டம்பர் 26ஆம் திகதி தியாக தீபம் தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ். மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும். அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ். மாநகரசபை சார்பில் நான் அழைப்பு விடுக்கின்றேன். இந்நிகழ்வுக்கு மேலதிகமாக குறித்த நினைவிடத்தைச் சூழ வேறும் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்பதையும் கவனத்திற் கொள்ளுமாறும் அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே நான் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். அவர் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அடுத்து, பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மலரஞ்சலி செலுத்துதல் நிகழ்வுகள் அனைத்தும் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறும். எமது போராட்டத்தை நேசிக்கும், எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களின் பங்குபற்றுதலோடு சிறப்புற இடம்பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டுமொருதடவை வலியுத்த விரும்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X