- டி. விஜித்தா, எம். றொசாந்த்
யாழில் 119 கிலோ கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்தபோது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளார்கள்.
அத்துடன் படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்று மாலை காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை, மன்னார், பாலாவியை சேர்ந்தவர்கள் எனவும் , இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை கைமாற்றி எடுத்து வந்தபோதே அவர்களை கடற்படையினர் கைது செய்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை , காரைநகரில் முச்சக்கர வண்டியில் கஞ்சாவை கடத்துவதாக யாழ். பொலிஸ் சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரின் ஓட்டோவை சோதனையிட்ட போது அதனுள் இருந்து ஒரு கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்டவரையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் நேற்று தாம் ஒப்படைத்ததாக யாழ். பொலிஸ் சிறப்பு அதிரடி படையினர் தெரிவித்தனர்.