2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒப்பந்தக்காரர்கள் தமது கடமையைச் சரியாக செய்ய வேண்டும்: சந்திரகுமார் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பிரதேசத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்ற மக்களின் நலன் கருதியும் பிரதேசத்தின் துரித அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் ஒப்பந்தக்காரர்கள் தங்களுடைய கடமைகளை விரைவாகவும் பொறுப்புணர்வுடனும்  மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை மாலை கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒப்பந்தக்காரர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாவட்டம் யுத்தத்தின் முழுப்பாதிப்புகளையும்  சுமந்த மாவட்டம். எனவே இங்கு துரித அபிவிருத்தியே தேவை. அதனை கருத்தில் கொண்டே அரசு பல கோடி ரூபாக்களை செலவு செய்து பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதில் பல அபிவிருத்திப் பணிகள் நடைமுறையிலும் மேலும் பல நடைமுறைப்படுத்தவும் உள்ளன.

இந்நிலையில் பெரும்பாலான அபிவிருத்தி பணிகளின் பயன்கள் உரிய காலத்தில் மக்களிடம் சென்றடையாமைக்கு ஒப்பந்தக்காரர்களின் காலதாமதமும் இழுத்தடிப்புகளுமே காரணமாக உள்ளது. இதனால் மக்கள் பிரதிநிதிகளான நாம் மக்களிடம் குறைகள் கேட்பவர்களாக இருக்கின்றோம். இந்த நிலைமையினை தவிர்க்கவேண்டும். முப்பது வருடங்களாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் இன்றி துன்பப்பட்டு வந்த மக்களின் நலன் கருதி அரசு மேற்கொள்கின்ற அபிவிருத்தி பணிகளின் முழுப்பயனும் உரிய காலப்பகுதியில் மக்களை சென்றடைய வேண்டும். இதற்கு ஒப்பந்தக்காரர்கள் தங்களுடைய கடமைகளை பொறுப்புணர்வுடன் சரிவரச் செய்ய வேண்டும். தவறின் அது மக்கள் விரோதச் செயலாகவே நோக்கப்படும் எனத் தெரிவித்தார்

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடமாகாண உள்ளூராட்சி கூட்டுறவு கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி, மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .