2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தண்ணீர் பகை நெருப்பை மூட்டும் எரிபொருள் அரசியல் ஆக்கப்படுகிறது: ஐங்கரநேசன்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருள் அரசியல் ஆக்கப்படுகிறதென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

பற்றாக்குறையான நீர்வளத்தை பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யுமென்பதுடன்,  தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறதெனவும் அவர் கூறினார்.

உலக நீர்தினத்தையொட்டி அவர் சனிக்கிழமை (22) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'பூவுலகில் உயிரிகள் தோன்றுவதற்கும் உயிரிகளின் நிலைத்திருத்தலுக்கும்; காரணமாக அமைந்திருப்பது தண்ணீர். ஆனால், இந்த உயிர்த்திரவத்துக்கு தற்போது உலகம் பூராவும் பெரும் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதிகரித்துவரும் சனத்தொகையின் குடிநீர், விவசாயம் மற்றும் கைத்தொழில் தேவைகளை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு மாசுபடும் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள வறட்சியும் சேர்ந்து தண்ணீரை அதிகம் தட்டுப்பாடான ஒரு வளமாக ஆக்கிவிட்டுள்ளன. உலகம் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்நீர் நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை வருடம் தோறும் மார்ச் 22ஆம் திகதியை உலக தண்ணீர் தினமாக கடைப்பிடித்து வருகிறது.

உலகில் 800 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தூய குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அசுத்தமான தண்ணீர் காவிவரும் நோய்களால் வாரம் தோறும் 27,000 குழந்தைகள் அநியாயமாக உயிரிழக்கின்றன.  கடும் வறட்சி நிலவும் ஆபிரிக்க நாடுகளில் காய்ந்த நாக்குகளைச் சிறுநீரால் நனைக்கும் பரிதாபமுள்ளது.

நீர் நெருக்கடிகளை பொருத்தமான வழிமுறைகளில் எதிர்கொள்ளாது இருந்தால், இன்னும் 15 வருடங்களில்  உலக சனத்தொகையில் பாதிப்பேருக்கும் மேல் நல்ல தண்ணீருக்காக அல்லற்பட நேரிடுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கிறது.

தண்ணீரில் மாசுக்களாக இரசாயனங்களும் நோய்க்கிருமிகளும் மாத்திரம் அல்லாமல், கண்ணுக்கு தெரியாமல் அரசியல் மாசும் கலந்துள்ளது. குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறையான நீர்வளத்தை பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள்; தீராத பகையாக முற்றச் செய்யும். தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது. நீர் விநியோகத்தை பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒரு பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தந்திரோபாயமும் இந்தத் தண்ணீர் அரசியலினுள் அடக்கம்.

சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. ஆனால், இயற்கை அன்னை தாகம் தீர்க்கவென இலவசமாக வழங்கிய தண்ணீர் இன்றைய பொருளாதார உலகில் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது. நீராதாரங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு மழை நீரை மண் உறுஞ்சும் வேகத்தைவிட நிலத்தடி நீர் அதிவேகமாக உறுஞ்சப்படுகிறது.

போரினால் நலிந்துபோயுள்ள ஈழத்தமிழ்ச் சமூகம் தான் வாழ்வாங்கு வாழ்ந்த மண்ணில் மேன்மேலும் விழுதெறிந்து கிளைக்கத் தண்ணீர் அரசியல் குறித்தும் தண்ணீர்ப் பொருளாதாரம் குறித்தும் விழிப்பாக இருப்பது அவசியமாகும். கூடவே, வீண்விரயமிக்க நீர் பாவனையாலும் மிகையான விவசாய இரசாயனங்களாலும் கடும் வறட்சியினாலும் அளவிலும்   தரத்திலும் தாழ்ந்துபோயிருக்கும் நீர்வளத்தைப் பாதுகாப்பது குறித்து காலம் தாழ்த்தாது சிந்திப்பது அவசியமாகும்.

உலக தண்ணீர் தினமான இன்று சொட்டு நீரும் எங்கள் சொத்து என்பதை மனதில் பதித்து அரிய வளமான நீர்ச்செல்வத்தைச் சாத்தியமான வழிகளிலெல்லாம்  பேணுவோம் என்று உறுதி ஏற்போம்' என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .