2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழர்களின் அரசியல் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட வேண்டும்: சி.வி.கே

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் எமது அரசியல் பலத்தை மீண்டும் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழர்களாகிய எங்களின் நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டு அகிம்சைவழிப் போராட்டம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலேயே 1976ஆம் ஆண்டில், வட்டுக்கோட்டையில் வைத்து தந்தை செல்வாவினால் தமிழீழம்தான் எமக்கான இறுதித் தீர்வு என்ற கோரிக்கை கொண்டுவரப்பட்டு மக்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்றார்.

'அதற்கமைவாக, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலே 18 ஆசனங்களைத் தமிழ் மக்கள் வடக்கு - கிழக்குக்கு வழங்கி, தமது பலத்தை நிரூபித்துக் காட்டினர். 1983ஆம் ஆண்டின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டம் 2009இன் இறுதியில் முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்தது.

2016ஆம் ஆண்டில், வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர்களுடைய வரலாற்று ரீதியான சரித்திரபூர்வமான நிலத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாங்கள் பெற்றுத்தருவதற்கு இருபது ஆசனங்களுக்கு குறையாத பலமிக்க ஆணையாக தமிழர்கள் பலத்தை நிரூபிக்கின்ற ஆணையாக இருக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X