2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

11 சடலங்களும் விமானத்தில் கொண்டுவரப்பட்டன

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பலியான, 11 பேரின் சடலங்களும், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தின் மூலமாக, இரத்மலானை விமான நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன. 

அங்கிருந்து, ஹொரணை மில்லதியவுக்கு கொண்டுசெல்லப்பட்டு, சடலங்கள் யாவும், உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்றும் இலங்கை விமானப் படையினர் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது. 

சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதிலொருவர், சனிக்கிழமை மாலையே மரணமடைந்துவிட்டார்.  

ஏனைய இருவரும், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சனிக்கிழமை இரவே மாற்றப்பட்டுள்ளனர்.   

இதேவேளை, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர். சடலங்கள் மீதான பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னரே, அச்சடலங்கள் யாவும், விமானத்தின் மூலமாக இரத்மலானைக்குக் கொண்டுவரப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .