2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இடமாற்றத்தைக் கோரி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

6 வருடங்களாக, கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தைக் கோரி, யாழில், இன்று (18) காலை மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

முன்னதாக, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், அங்கு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குப் பேரணியாகச் சென்றனர்.

பின்னர், ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வடமாகாண ஆளுநர், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்,  இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர், மத்திய கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளித்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதானது, ஆசிரியர் தொழிலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பல்வேறுபட்ட பிரதேசங்கள், சமூக, பொருளாதார மற்றும் கலாசார சூழல்களில் உள்ள கல்லூரிகளில் சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு, திறனை விருத்தி செய்வதற்கு சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும், அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கை சுற்றறிக்கையின்   பிரகாரம் இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை எனவும் இடமாற்றம் தொடர்பாக தமக்கு உரிய தீர்வை வழங்காவிடின், தேசிய ரீதியில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .