2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புகள் உள்ளன’

Editorial   / 2018 பெப்ரவரி 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

“தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரு கட்சி, ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் இன்னுமொரு பெரும்பான்மைக் கட்சி இணைந்தே செயற்பட வேண்டும். தற்போதைய உள்ளுராட்சித் தேர்தல் முறைமையானது பிழையானது. யாழ்.மாநகர சபையைப் பொறுத்தவரையில் 27 வட்டாரங்களில், 14 பெரும்பான்மையான வட்டாரங்களை வென்றும் நாங்கள் இன்று ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதுமட்டுமன்றி, வேறு சில சபைகளைப் பார்க்கின்ற போது வட்டாரங்களில் வெல்ல முடியாதவர்கள் விகிதாசார ரீதியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களைப் பெற்றுள்ளார்கள். இந்த முறைமையில் உள்ள பின்னடைவு, ஸ்திரத்தன்மையற்ற நிலையைத்தான் உருவாக்கியுள்ளது.

எவ்வாறு இருந்தாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு  இது தோல்வி நிலை அல்ல. தற்போதைய நிலையில் ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளது. இதற்கு எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. கடும் நிபந்தனைகளை யாரும் விதிப்பது நல்லதல்ல. இணக்கப்பாட்டுடன் செல்வதே நல்லது. தமிழ்க் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். பிடிவாதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகவில்லை. சமஷ்டிக் கட்டமைப்பில் இருந்தும் விலகவில்லை. வட கிழக்கு இணைப்பிலும் மாற்றமில்லை. 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அடுத்த அரசியலமைப்பில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மொழியாக்கப்படும், பிரயோக மொழியாக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுத் தான் இருக்கின்றன. ஆகையால் வட கிழக்கு இணைப்பும் அவ்வாறான மாற்றங்களில் வரும்.

ஆனபடியால் அதனை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எமது கொள்கைகளில் உறுதியாகவே உள்ளோம். இதுதான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையாகும். இடையில் இதனை சிலர் வியாக்கியானம் செய்யலாம். அவ்வாறு செய்வது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும். கட்சியின் முடிவல்ல. தமிழரசுக் கட்சி கொள்கையில் உறுதியாகவே உள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .