2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மார்ச் 7ஆம் திகதி கச்சதீவு பெருவிழா

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

மார்ச் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன், யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, யாழ். மாவட்டச் செயலாளர் அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி, 7ஆம் திகதி பெருதிருவிழா நடைபெறவுள்ள நிலையில், கச்சதீவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (14)  காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார், போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மார்ச் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல், இரவு 10 மணிவரை கச்சதீவுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பிடத்தில் இருந்தும், தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்தும், குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவுக்கான படகு சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவுக்கான படகு சேவைக் கட்டணமாக, ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாயும் நெடுந்தீவில் இருந்து, கச்சதீவுக்கான கட்டணமாக 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கச்சதீவில், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், கடற்படை மற்றும் பொலிஸார், இராணுவம் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில், இந்தியாவில் இருந்து, 3 ஆயிரத்துக்கும் அதிகமாக யாத்திரிகர்களும், இலங்கையில் இருந்து 7 ஆயிரம் யாத்திரிகர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அனைத்து தரப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், யாத்திரிகர்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியுமென்றும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .