2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Yarl IT Hub-இன் Ideation பயிற்சிப்பட்டறை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜெயக்குமரன் சந்திரசேகரம்

இராகவன், அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர், தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக்கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய நுண்ணறிவு அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான செயலிகளை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார்.

இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதி வரையிலும் உருப்படியான, மக்களுக்கு பயன்படும் வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்படமுடியாமல் போய்விட்டது. அவர் உருவாக்கிய எந்த மென்பொருளையும் எவரும் பயன்படுத்துவதில்லை.அவருடைய செயலிகள் அப்பிள் ஸ்டோரிலே யாராலுமே தரவிறக்கப்படாமல் தூங்குகின்றன. இன்றைக்கு இராகவன் ஏதோ ஒரு உப்புமா நிறுவனத்தின் உப்புமா மென்பொருளுக்காக தன்னுடைய திறமையை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்.

திறமைசாலியான இராகவனால் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒருஅறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியாமல் போனதன் காரணம் என்ன? இராகவன் என்றில்லை.சுரேஷ், மதிவதனி, ரேணுகா என்று எமக்குப் பரிட்சயமான பெயர்கள் எல்லாம் மனதிலேவந்துபோகிறது. இவர்கள் எல்லாம் ஏன் இப்படிப்போனார்கள்?

“The thing is to really feel empathy, try to understand people by observing them” என்கிறார் ஐடியோ நிறுவனத்தை உருவாக்கிய டேவிட் கெல்லி.

ஒரு சிறந்த கருவியோ கண்டுபிடிப்போ மக்களின் வாழ்க்கை நிலையை ஏதோ ஒரு வகையில் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் ஏதோவொரு சிக்கலை அது தீர்க்கவேண்டும். அதற்கு அவர்களுடைய கண்களினூடாக, அவர்களுடைய உணர்வுகளினூடாக அந்தச் சிக்கல்களை வடிவமைப்பாளர்கள் உள்வாங்கவேண்டும். ஒரு விவசாயி நாளாந்தம் வயலிலே எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வினை குளிரூட்டப்பட்ட அறையினுள் கணனித்திரையின் முன்னால் முழுநாளையும் கழிக்கின்ற ஒருவரால் அடையமுடியாது. விவசாயியாலும் அதனை அடையமுடியாது. விவசாயிக்கு சமயத்தில் தனது தேவை எது? எதில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் தன்னுடைய வேலை மேம்படும்? எவையெல்லாம் சாத்தியம்? என்பதை உய்த்துணருகின்ற திறன்கூட இருக்குமென்று சொல்லமுடியாது. அதனால் பல்வேறு துறைசார்ந்தவர்களோடு, பல்வேறு திறன்களை உடையவர்களோடு அந்த விவசாயியும் தொழில்நுட்பவாதியும் இணைந்து செயற்படும்போது பிரச்சனை எதுவென்றும் அறிந்து அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடைவதும்கூட முடியுமான காரியமாகிறது.

இவ்வாறான கலந்துரையாடல்களில் பொதுப்புத்தியின்பாற் சிந்திக்காமல் வித்தியாசமாகச் சிந்தித்து முடிவுகள் எடுப்பது முக்கியம். ஏனெனில் இத்தனைகாலமும் சமூகத்தால் எதிர்கொள்ளப்படுகின்ற, தீர்க்கப்படாத சிக்கலையே இந்தமுறையின் மூலம் தீர்க்கப்போகிறார்கள். ஆகவே அந்தத் தீர்வு இதுவரையும் பயன்படுத்தாத புதுமாதிரியானதாக இருத்தல் அவசியம். அதற்கு நம் மூளைக்குப் பழக்கப்பட்ட சிந்தனை முறைமையிலிருந்து அப்பாற்சென்று சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது.

மேற்சொன்ன கருத்துகளைத் தாரக மந்திரமாகக்கொண்டே ஐடியோ நிறுவனத்தைத் தொண்ணூறுகளில் டேவிட் கெல்லி ஆரம்பித்து வைத்தார். அவர்களுடைய ஒவ்வொரு வேலைத்திட்டங்களிலும் பல்துறை நிபுணர்கள் இருப்பார்கள். தொழில்நுட்பவியலாளர், மனோதத்துவ நிபுணர், வைத்தியர், மொழியியலாளர், வர்த்தக நிபுணர்கள் என்று பல்வேறுபட்டவர்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வை அடைவதற்காக ஒன்றுகூடி செயற்படுவார்கள். ஐடியோ நிறுவனம் கணணி மவுசிலிருந்து, தளபாடங்கள், மின்கருவிகள், மருத்துவ உபகரணங்கள் என்று எண்ணற்ற புதுமையான கண்டுபிடிப்புகளை இதுவரைக்கும் நிகழ்த்தியிருக்கிறது.

 யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hub ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள்பூர்த்தியாகின்றன. இன்றைக்கு நம் மத்தியில் பல பொறியியலாளர்கள் இருக்கிறார்கள்.தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை நேர்த்தியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் உள்ளனர். திறமைக்குக் குறைவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமூகத்தின் பல்துறை சார்ந்த பிரச்சனைகளோ, அதற்கான தீர்வுகளோ அவ்வளவாகத் தெரியாது. அதுபற்றிய தகவல்களோ, அறிவோ அவர்களிடம் அவ்வளவாக இல்லை. Yarl IT Hub நிறுவனம் அப்பொறியலாளர்களையும் துறைசார் நிபுணர்களையும் ஒன்றிணைத்து ஒரு நாள் வேலைத்திட்டம் ஒன்றை பரீட்சார்த்தமாக செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விவசாயம், மருத்துவம், கல்வி, மீனவம், மொழியியல் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழில்நுட்பத்துறையில் இயங்குபவர்களும் அன்றைய தினம் ஒன்றிணைவார்கள்.

நீங்கள் விவசாயம், மருத்துவம், கல்வி, மீனவம், மொழியியல் போன்ற துறைகளில் ஏதோ ஒன்றில் பணிபுரிபவராகவோ அல்லது அத்துறை சார்ந்து இயங்குபவராகவேஇருந்தால் இந்த ஒருநாள் செயற்திட்டத்தில் இணைந்து உங்களுடைய பங்களிப்பை நல்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

அத்துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் இனங்கண்டு, அவற்றை பிரேரிக்கும் பட்சத்தில் எல்லோரும் இணைந்து அன்றையதினமே ஒரு தீர்வை நோக்கிமுன்னேறும் சாத்தியம் உண்டு. பல்வேறு தேவைகள் இனங்காணப்படின், ஈற்றில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்சினை தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் பன்முகத்தன்மை வாய்ந்த குழுக்களால் அந்தப் பிரச்சினை ஆராயப்பட்டு, அந்த நாளின் இறுதியிலேயே செயற்படுத்தக்கூடிய ஒரு திட்டவரைவு முடிவுசெய்யப்படும். அடுத்துவரும் வாரங்களில் அந்தத்திட்டங்களையே தொழில்முனைவாக ஆரம்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படலாம்.

Ideation Workshop என்கின்ற இந்த ஒருநாள் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறுமணிவரை இடம்பெறவிருக்கிறது. மேற் சொன்ன துறை சார்ந்தவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் (அவர்கள் கணனித்துறை சார்ந்தவர்களாக இருக்கவேண்டிய தேவை இல்லை) இந்தவேலைத்திட்டத்தில் இணைந்து பங்களிப்புச் செய்யுமாறு Yarl IT Hub நிறுவனம் அழைப்புவிடுக்கிறது.

புதுமையான சிந்தனைகளையுடைய மேற்சொன்ன துறைகளைச் சார்ந்தவர்களிடம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள். ஒரு விவசாயியும் வர்த்தகத்துறையாளரும் இலத்திரனியல் பொறியலாளரும் கலந்து பேசும்போது புதுப்பரிமாணங்களில் பிரச்சனைக்கு தீர்வுகள் உருவாகலாம். ஒரு முழுநேர மீனவரும் கணனிப்பொறியாளரும் கலந்து திட்டமிடுகையில் ஏதாவது நடைமுறை மீன்பிடிப் பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாகத் தீர்வினை எட்டமுடியும். மொழியியல் துறையில் கூட ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. தமிழைப் பிழையில்லாமல் எழுதுவதே ஒரு பிரச்சினைதான்! அதற்கு அறிவியல் ஏதாவது தீர்வினைக் கொடுக்கமுடியுமா? ஒன்றுகூடித் திட்டமிடலாம்.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பினால், http://www.yarlithub.org/yarl/ideation-workshop எனும் இணைப்பிலுள்ள விண்ணப்ப படிவத்தினை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (20)  பூர்த்திசெய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X