2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மத்தியிலிருந்து நிதியைப் பெற்று மக்கள் சேவை செய்வோம்’

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண சபையின் சில அதிகாரிகளின் அதிகாரிவாதத்தின் காரணமாக, மக்களுக்குச் சேவை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சமல் பிரசன்ன செனரத் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து, மக்களுக்குச் சிறந்த சேவையைச் செய்ய வேண்டியுள்ள போதிலும், இன்று அவ்வாறான நிலை வடமேல் மாகாண சபையில் காண முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வடமேல் மாகாண கூட்டத்தின் போது, தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் சேவை தொடர்பாகப் பேசும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும், நிதி இல்லை, நிதி இல்லை என்றே கூறுகின்றார்கள். நிதி இல்லை என்று கூறிக் கொண்டு, மௌனமாக இருக்க முடியாது. நாம், மக்கள் சேவைக்காகக் கட்டுப்பட்டிருக்கின்றோம். மத்திய அரசாங்கம், மாகாண சபைக்கு நிதியை வழங்காவிட்டால், நீங்கள் வீதியில் இறங்குங்கள், நாமும் வருகின்றோம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். நாம் இரு தரப்பினரும் இணைந்தே, நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம்.

“அமைச்சரவையை எடுத்துக் கொண்டாலும் வலுவான பல அமைச்சுகள், ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. அந்த அமைச்சர்களோடு பேசி, மாகாண சபைக்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

“அதிகாரிகளை இணைத்துக் கொண்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களின்றி பணியாற்ற வேண்டும். அதிகாரிவாதத்துக்கு இடமளிப்பது நல்லதல்ல.

“தொழில்வாய்ப்பு, வேலைத்திட்டங்களை எடுத்துக் கொண்டால், எதிர்க்கட்சியான எமக்கு, அநீதி இழைக்கப்படுகின்றது.  எதிர்க்கட்சியின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆளுங்கட்சி, எந்த ஒத்துழைப்புகளையும் வழங்குவதில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .