கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி 24.69 கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.29 வீத வீழ்ச்சி என இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை உற்பத்தி பகுதிகளில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்ததாக தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
உயர் நில தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது. 4.56 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி காணப்பட்டதுடன், இது சுமார் 19 வீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நில தேயிலை உற்பத்தி சற்று அதிகரித்து 4 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3.7 கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது.
தாழ் நில தேயிலை உற்பத்தியை பொறுத்தமட்டில் சிறிய வீழ்ச்சி அவதானிக்கப்பட்டிருந்தது, கடந்த ஜூன் மாதம் 16.3 மில்லியன் கிலோகிராம்களாக காணப்பட்ட தாழ்நில தேயிலை உற்பத்தி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 16 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது.
மே மாதம் வரை தேயிலை உற்பத்தி 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவாக பதிவாகியிருந்தது. தேயிலை ஏற்றுமதி வருமானம் 23.8 பில்லியன் ரூபாவிலிருந்து 14.8 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.