இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் சுகாதார அமைச்சின் ஒப்பனைப் பொருள் மற்றும் மருந்து ஒழுங்;குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு 20 கணினிகளையும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பொன்றையும் அன்பளிப்பு செய்துள்ளது.
சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளத்தின் புதிய தலைவர் ஸ்டுவர்ட் செப்மன் இவற்றை கையளித்தார்.
2.2 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த அன்பளிப்பு பொருட்கள் காரணமாக ஒப்பனைப் பொருள் மற்றும் மருந்து ஒழுங்;குபடுத்தும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் கணினி மயப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு தேவையான மென்பொருள்களை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்;குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் தமது பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அப்பாற் சென்று சுகாதாரத்துறையின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்ததுடன் நோயாளர்களின் நலனை கருத்திற்கொண்டு அரச துறையும் தனியார் துறையும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒப்பனைப் பொருள் மற்றும் மருந்து ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம கருத்து தெரிவிக்கையில், 'இந்த அன்பளிப்பு காலத்தின் தேவையாகும். மருந்து ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தரவுகளை களஞ்சியப்படுத்தும் முறைமை பழமை வாய்ந்தது. அதனை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் உதவ முன்வந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என குறிப்பிட்டார்.