2010ஆம் ஆண்டு இலங்கை ஆடை ஏற்றுமதிகளுக்கு அனுபவித்து வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை முறை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் ஆடைத்தொழில் துறை பெரும்பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரிச்சலுகை இடைநிறுத்தத்தையடுத்து சுமார் 25 தொழிற்சாலைகள் இதுவரையில் மூடப்பட்டுள்ளதாகவும், 10000இற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இந்த வரிச்சலுகை இரத்தின் காரணமாக இலங்கைக்கு மொத்தமாக 782 மில்லியன் ரூபா வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு 10 தொழிற்சாலைகளும், 2011ஆம் ஆண்டில் 11 தொழிற்சாலைகளும், 2012ஆம் ஆண்டில் 4 தொழிற்சாலைகளும் இந்த வரிச்சலுகை இடைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளன.
இருந்த போதிலும், தற்போது ஆடைத்தொழில் துறையில் போதியளவு ஆளுமை வாய்ந்த தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்ததுடன், கட்டுநாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் மாத்திரம் 12000 தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.