இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் மற்றும் எரிவாயு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் நோக்கில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு நிறுவனத்தின் எரிபொருள், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த நிதி செலவிடப்படும் என கெய்ன் இந்தியாவின் தலைவர் நவீன் அகர்வால் மும்பை நகரில் நடைபெற்ற கெய்ன் இந்திய பங்குதாரர்களின் வருடாந்;த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கெய்ன் இந்தியாவின் இந்த காலாண்டுக்கான நிதி அறிக்கையில் நிறுவனம் வரிக்கு பின்னரான இலாபமாக 3,127 கோடி இந்திய ரூபாவை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் கடந்த காலண்டுடன் ஒப்பிடுகையில் இது 22 வீத வளர்ச்சியாகும்.
தமது நிறுவனம் ராஜஸ்தானில் நாளாந்தம் 212,442 பீப்பாய் எரிபொருள் உற்பத்தி செய்கின்றதாகவும் சிறந்த வகையில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதாகவும் அதன் பணிப்பாளர் இளங்கோ.பி தெரிவித்தார்.
அத்துடன் கெய்ன் நிறுவனம் இலங்கை, இந்தியா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹைதரோகார்பன் அகழ்வுகளில் ஈடுபடுகின்றதுடன் உற்பத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.
மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்;ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் கெய்ன் லங்கா நிறுவனம் இதுவரையில் நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்டதுடன் அதில் இரண்டு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.