2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பங்குச்சந்தையில் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூன் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரங்களில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு, திறக்கப்பட்ட இலங்கையின் பங்குசந்தை தொடர்பில், அதீத கேள்விகள் எழுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இதனடிப்படையில் இலங்கையரொருவர் பங்குச்சந்தையொன்றில் பங்குகொள்ள விரும்புகின்ற சந்தர்ப்பத்தில், எத்தகைய விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும், எதைப் பூர்த்திசெய்வதன் மூலமாக, இலங்கைப் பங்குச்சந்தையில் பங்குப் பரிவர்த்தனை செய்கின்ற ஒருவராக மாற முடியும் என்கிற அடிப்படைகளைப் பார்த்திருந்தோம்.

இன்றைய நாளில், பங்குச்சந்தையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதாகக் தெரியவருகின்றது. அப்படியாயின், பங்குச்சந்தையில் எத்தகைய பங்குகள், கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன. பங்குகளின் இயல்புத்தன்மை அடிப்படையில், அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. அதற்குப் பின்னால் உள்ள விடயங்கள் போன்றவற்றை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

மேலோட்டமாக, இலங்கைப் பங்குச்சந்தை தொடர்பில் பேசுகின்றபோது, நாள்தோறும் பில்லியன் கணக்கான கொடுக்கல் வாங்கல்கள்,  பங்குச்சந்தை இணையத்தில் இடம்பெறுவதாக, வணிகச் செய்திகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் இந்தப் பில்லியன்களை உழைத்துத் தர, எது பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை அறிந்திருக்கிறோமா? அவற்றின் தன்மை அடைப்படையில், அவை எவ்வாறு கண்டறியப்படுகின்றன என்பதை அறிந்திருக்கிறோமோ?

பங்கு சந்தையொன்றில், ஈடுபாட்டுடன் பங்குகொள்ள விரும்பும் பங்காளர்களுக்கு, இலாபம் உழைக்கும் நோக்கமும் ஊக்கமும் எவ்வாறு உள்ளதோ, அதுபோன்றே அபாயநேர்வுகளைச் சந்திக்கக்கூடிய மனத்திறனையும் கொண்டிருத்தல் அவசியமாகும்.

அபாயநேர்வுகள் காரணமாக, நட்டத்தைச் சந்திக்கின்றபோது, விரக்தியடைந்து பங்குச்சந்தையை விட்டு வெளியேற எண்ணுவதை விட, அத்தகைய நட்டங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, பங்குச்சந்தையில் எவ்வாறு முன்னேறிச் செல்லவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பங்குச்சந்தை தொடர்பிலும் அதன் அடிப்படைச் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

பங்குச்சந்தையில் எப்போதுமே, குறுகிய காலத்துக்குள் நலன்களை ஈட்டிக்கொள்ளுவது என்பது அசாதாரணமானது. அதுபோல, நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்பு, அதிக நலனை, இலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பதும், சாதாரணமான ஒன்றாகும்.

எனவே, எவ்வளவு காலம் நீங்கள் பங்குச்சந்தையின் அசைவுகளைக் (Movements) கண்காணித்து இருக்கிறீர்கள் என்பதே, முக்கியமானதே தவிர, எப்போது சந்தையில் பிரவேசிப்பது என்பதல்ல. ஆனால், சந்தை அசைவுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், குறுகியகால முதலீடுகள் மூலமாக, நலனைப் பெற முயற்சி செய்யும்போது, எப்போது பங்குகளைக் கொள்வனவு செய்வது, விற்பனை செய்வது என்பதில், காலமானது முக்கியத்துவம் பெறுகிறது.

எந்தப் பங்குகளை வாங்குவது என்கிற தீர்மானமானது, ஒவ்வொருவரினதும் முதலீட்டுக் குறிக்கோளுக்கு அமைவாக, மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுபோல, பங்குகள் மீது முதலீடுகளை மேற்கொள்கின்றபோது, அது, குறுகிய, நீண்டகால நலன்களைத் தருமா என்பதையும் நீங்கள் கவனித்தல் வேண்டும்.

நீண்டகால முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளும்போது, முதலீடு செய்த ஆரம்ப முதலை, விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடிய பங்கு வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் எழலாம். அதுபோல, குறுங்கால முதலீட்டுப் பங்குப் பரிவர்த்தனையின்போது, அதனுடன் இணைந்த நட்ட அச்சங்கள் தொடர்பிலும், அவதானமாக இருத்தல் வேண்டும். இதன்போது, நீங்கள் முதலீடு செய்யும் பங்கின் வகையானது, பல்வகைக் காரணிகளின் அடிப்படையில் பின்வருமாறு வேறுபடும்.

வருமானப் பங்குகள்:

இவ்வகைப் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு ஒரு தொடர்ச்சியான வருமானப் பாய்ச்சலை வழங்கும் பங்குகளாகும். ஏனைய பங்குகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, பங்குஇலாபத்தில் அறவிடப்படும் வரிகள், பங்குக்கான செலவு, அதன் தேறிய பங்கு இலாபம் ஆகியவற்றை ஒப்பிட்டுக் கவனிக்கப்பட வேண்டும்.

பெறுமதிப் பங்குகள்:

பெறுமதிப் பங்குகள் பெரும்பாலும் குறைவான விலையையும் உயர்ந்த பங்கு இலாப விளைவுகளையும் கொண்டிருக்கும். நீண்டகால முதலீட்டாளர்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்தகைய பங்குகளை, அதன் மெய்யான பெறுமதி பங்கிலாபங்கள், பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் வரை வைத்திருப்பார்கள்.

வளர்ச்சிப் பங்குகள்:

பங்குச்சந்தையில், திடமான வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் பங்குகளாகும். இத்தகைய பங்குகள், குறைவான பங்கிலாபத்தைச் செலுத்தக்கூடும். அல்லது, எவ்வித பங்கிலாபத்தையும் வழங்காமற் போகலாம். பெரும்பாலும், வளர்ச்சிப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள், எதிர்கால இலாபத்துக்காக, பங்குகளின் விலைகள் அதிகரிப்பதன் மூலமாகப் பெறக்கூடிய நிகரப் பங்கிலாபத்தைப் பெறுவதற்காக வைத்திருப்பார்கள்.

சுழற்சித் தன்மையுடைய பங்குகள்:

பெரும்பாலும், சந்தையின் போக்குக்கு நெருங்கிய தொடர்பைக் கொண்ட பங்குகளாக இவை இருக்கும். எனவே, இவற்றின் சந்தைப் பெறுமதி, இலாபத்தன்மை என்பவற்றை வரையறுத்து, நிச்சயமாகக் கூறமுடியாத ஒன்றாக இருக்கும்.

தற்காப்பான பங்குகள்:

எவ்விதமான புறக்காரணிகள், பொருளாதார மாற்றங்கள் போன்ற எவையும் பாதிக்காத பங்குகள் இவையாகும். இவ்வகைப் பங்குகள் எவ்வகையான பொருளாதார இடர் நேர்வுகளின் போதும் திடமான தன்மையைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும்.

பங்குகளைத் தெரிவுசெய்யும்போதும் பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும், முதலீட்டாளர் ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று, பங்குத் தரகர்களின் வழிகாட்டலுடன் தமக்குத் தேவையான மேற்கூறிய பங்குகளை இனம்கண்டு, அவற்றில் முதலிடக் கூடியதாக இருக்கும். அடுத்து, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இணையத்தளத்தில் உள்ள வழிகாட்டல்களுடன், தனக்குத் தேவையான பங்குகளை இனம்கண்டு, முதலீடு செய்யக் கூடியதாக இருக்கும்.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 20க்கும் மேற்பட்ட, வெவ்வேறு துறைகளில் பட்டியலிடுகிறது. பொருளாதாரம் உட்பட வேறுபுறக்காரணிகளுக்கு அமைவாக, எந்தத் துறையில் முதலீட்டைச் செய்யவேண்டும் என்பதை அறிந்துகொண்டு, அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை, இனம்காண முடியும். அதேபோன்று, மேற்கூறிய காரணிகளைக் கொண்டு, நிறுவனப் பங்குகளை ஆய்வு செய்யும்போது, ஊகப் பண்புடைய பங்குகள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

ஊகப்பண்புடைய பங்குகள்:

சந்தை ஆய்வின்போது கவர்ச்சிகரமான தகவல்களையும் விரைவில் வளர்ச்சியையும் காட்டும் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிறுவனங்களின் பங்குகளே இவையாகும். இத்தகைய நிறுவனங்கள் தமது வளர்ச்சி தொடர்பில் விளம்பரப்படுத்தும்போது அதற்கான அடிப்படை ஆதாரங்களை அளிக்காதுவிடின்இ அவை நட்ட அச்சத்தன்மை கொண்ட ஊகப்பண்புடைய பங்குகள் ஆகும். இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

பங்குகளின் இயல்புத் தன்மையின் அடிப்படையில், அவற்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள அறிந்திருக்கின்ற நாம், பங்குச்சந்தையில் அதிக இடர் நேர்வுகளின் அடிப்படையில் எவ்வாறு, முதலீடு செய்ய வேண்டுமென்பது தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டும்.

முதலீட்டுக்காக உங்களிடம் இருக்கின்ற 100சதவீதமான பணத்தை, ஒட்டுமொத்தமாக ஒன்றிலேயே எப்போதும் முதலீடு செய்யாதீர்கள். இது, ஒட்டுமொத்த இலாபம் ஈட்டித்தருவதாக இருந்தாலும் சரி, நட்டமாக இருந்தாலும் சரி, உங்களை மிகப்பெரும் அளவில் பாதிப்பதாக அமையும். அதாவது, இலாபம் வருகின்றபோது இது, மிகப்பெரும் பிரச்சினையாக இருக்காது.

ஆனால், நட்டம் ஏற்படுகின்றபோது, உங்களுக்கான பாதிப்பு, 100 சதவீதமானதாக இருக்கும். எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, பாதுகாப்பான கலப்பு முதலீட்டு முறை, பல சந்தர்ப்பங்களில் உங்களின் மீள்முதலீட்டுக்கான இயலுமையையும் தொடர்ச்சியாகச் சந்தையில் பரீட்சார்த்தங்களைச் செய்யவும் உதவியாக இருக்கும்.

முதலீட்டு முறை

சாதாரணமாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், எதை அடிப்படையாகக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த முதலீட்டு நிதியில் 60 சதவீதமானவற்றைப் பங்குகளிலும் 30 சதவீதமானவற்றை முறிகளிலும் (அபாயநேர்வு குறைவான அரச பங்குகள்) 10 சதவீதத்தைப் பணமாகவும் கொண்டிருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், 80 சதவீதமான பங்குகளைக் கொண்டிருபின், அது முதலீட்டின் உயர்நிலையாகக் கொள்ளப்படும். இந்த நிலையில், முதலீட்டாளர் இலாபத்தையோ, நட்டத்தையோ அடையக்கூடிய உயர்நிலையைக் கொண்டிருப்பதாக இருக்கும். (அரச முறிகளின் கொள்வனவு தொடர்பிலும் முதலீடு தொடர்பிலும் தனியாகப் பார்க்கலாம்)

மீள் முதலீட்டுச் சந்தர்ப்பங்கள்

பங்குச்சந்தையில் முதலீடு செய்தபின்பு, வேறொரு நிறுவனத்தின் பங்குகள் வாய்ப்பானதாக, முதலீட்டுக்கு ஏற்புடையதாக அடையாளம் காணும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதன்போது, தன்னிச்சையாக உள்ள பங்குகளை விற்பனைசெய்து, அதைப் புதிய பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னர், எதிர்கால முதலீட்டு உபாயங்களுக்கும், தற்போது செய்துள்ள எஞ்சிய முதலீடுகளுக்கும் நன்மை பயப்பதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே, முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பங்குத் தரகர் ஏன் அவசியம்?

கொழும்புப் பங்குச் சந்தையில், பாதுகாப்பானதும் முறையானதுமான பங்குப் பரிவர்த்தனையைச் செய்வதற்கு முதலீட்டாளர்கள், நேரடியாகவன்றி, தரகர்கள் ஊடாகவே அணுகுதல் வேண்டும். ஏனெனில், பங்குத் தரகர்கள் டாகவே, பரிவர்த்தனை கண்காணிப்பகங்கள் முறைமைபடுத்துவதால், ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் பங்குத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். இதன்போது, பங்குத்தரகர்கள் ஆலோசனைகளை வழங்குவதுடன், பங்குப் பரிவர்த்தனையின்போது, சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு, கொள்வனவு, விற்பனை கொடுக்கல் வாங்கல்களை முதலீட்டாளர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள்.

நடைமுறையில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையானது, சுமார் 20க்கும் மேற்பட்ட உரித்துமம் அளிக்கப்பட்ட பங்குத் தரகர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஒருவரை, உங்கள் முகவராக, ஆலோசகராகக் கொண்டு, பங்குச்சந்தையில் முதலீட்டாளராக உள்நுழைய முடியும்.

பங்குகளை எப்போதெல்லாம் கொள்வனவு செய்ய முடியும்?

சாதரணமாக, முதலீட்டாளர்கள் பங்குகளை முதலாந்தரச் சந்தையில், இரண்டாம் தரச் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாம் தரச் சந்தை என்பது, புதிய பங்கு வழங்கலின் ஊடாக, மூலதனத்தைத் திரட்டிக்கொள்ள உரித்துடமை கொண்ட நிறுவனங்களால், முதன்முறையாகப் பொது மக்களுக்குப் பொது வழங்கலைச் செய்யும் சந்தையாகும். அதுபோல, இரண்டாம் தரப் பங்குச் சந்தை எனப்படுவது, ஏற்கெனவே, முதலாம் தரச் சந்தையின் ஊடாக, பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்ட பங்குகள், மீளவும் மூலதன ஆதாயங்களுக்காகவும் ஏனைய நலன்களுக்காவும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற சந்தை இதுவாகும்.

மேற்கூறிய அனைத்துமே, பங்குச்சந்தையொன்றில் புதிதாகப் பங்குகொள்ள விரும்புகின்ற எந்தவொரு முதலீட்டாளருமே, அறிந்திருக்க வேண்டிய அடிப்படையான விடயதானங்கள் ஆகும்.

(இந்த ஆக்கம், இலங்கைப் பங்குசந்தையால், புதிய முதலீட்டாளர்களுக்குச் சந்தை தொடர்பிலான போதிய அறிவை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஆவணங்களை அடிப்படையாக் கொண்டு, மேலதிக தகவல்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டதாகும்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .