2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு பயிற்சிகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அதிரன்

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்காக ஐந்து நாள்கள் கொண்ட பயிற்சி, மட்டக்களப்பில் நடைபெற்றது.  

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான தேர்ச்சித் திட்டத்தின் அனுசரணையில் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.நளீம் தலைமையில், இப்பயிற்சிகள் நடைபெற்றன.  

மட்டக்களப்பு, ஊறணி ஹிரிபோஜன் ஹோட்டலில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பங்குகொண்டனர்.  

இதில், சுற்றுலாத்துறையின் வேலைத்தளம், சூழலை சுகாதாரம் மிக்க பாதுகாப்பானதாகப் பராமரித்தல், விடுதிகள் குறித்து நல்லதொரு அபிப்பிராயத்தை வாடிக்கையாளர் மனதில் ஏற்படுத்தல், விருந்தோம்பற் குழுவின் அங்கத்தவராக வினைதிறனுடன் பணியாற்றல், உணவு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் பணியாற்றுவதாயின், பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.  

பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வில், திறன் அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. மரினா உமேஷ், மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்களான என். நிரோஷன், வி. மனோகரன், மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.  

நடைபெற்ற முதல் குழு பயிற்சிநெறியில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 23 சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பங்கு கொண்டதுடன், எதிர்வரும் மாதங்களில், மேலும் 4 குழு பயிற்சிகள் நடைபெறவுள்ளதுடன், 96 சுற்றுலா விடுதிகளின் 384 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும், மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனப் பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ் தெரிவித்தார்.  

இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றிய சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள், இப்பயிற்சிகளின் நிறைவில், தங்களது விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்ததொரு தேர்ச்சி பெற்ற சுற்றுலாத்துறை பணியாளர்களை உருவாக்கி, சர்வதேசத் தரத்திலான சுற்றுலாத்துறையை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இப்பயிற்சிகளின் நிறைவில், விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களால்  பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் வளவாளர்களால் திறன் அபிவிருத்திகள் களத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கான தேசிய தரச்சான்று 2க்கான (என்.வி.கியூ) சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .