2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

TAMAP இன் பெறுமதிச் சங்கிலி ஆய்வுகள்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள நிலையில், உணவுப் பெறுமதிச் சங்கிலித் தொடரிலுள்ள பல்வேறு பங்காளர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு என்பது முன்னொரு போதுமில்லாத வகையில் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் 'விவசாயத்துறையின் நவீன மயப்படுத்தலுக்கான தொழில்நுட்ப உதவி' (TAMAP) நிகழ்ச்சித்திட்டத்தினூடாக விவசாயத்துறையில் குறிப்பிட்ட இடையீடுகளினூடாக அதன் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆலோசனைச் சேவைகளை வழங்கும் நிறுவனமான Ecorys Nederland B.V. அமுல்ப்படுத்துவதுடன், அண்மையில் பழங்கள், மரக்கறிகள், மீன்வளர்ப்பு, பாற்பண்ணை, தேனீ வளர்ப்பு, மலர்ச்செய்கை, பனை, அத்தியாவசிய எண்ணெய் வகைகள் போன்றன தொடர்பில் விவசாய பெறுமதிச் சங்கிலித் தொடர் ஆய்வை முன்னெடுத்திருந்தது. இந்த ஆய்வின் பெறுபேறுகளை பகிர்ந்தளிப்பதை அடிப்படையாகக் கொண்டு கண்டி, கொழும்பில் TAMAPஇனால் தொடர் பயிற்சிப்பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

TAMAP குழுத் தலைவர் கலாநிதி. கிறிஸ்டோஃவ் பட்ஸ்லன் (Christof Batzlen) கருத்துத் தெரிவிக்கையில், “14 மாதங்களில் எம்மால் எட்டு பெறுமதிச் சங்கிலி ஆய்வுகளை முன்னெடுக்க முடிந்துள்ளது. பெறுமதிச் சங்கிலிகளின் செயற்படுநிலை, பொருளாதார, சமூக மற்றும் சூழல் அம்சங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருந்தோம்” என்றார்.

இலங்கையின் பல்வேறு பெறுமதிச் சங்கிலிகளில் விற்பனை செய்யப்டும் பொருட்களின் அளவு, தரத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பங்காளர்கள், விவசாய அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கு இந்த பெறுமதிச் சங்கிலி ஆய்வு பெறுபேறுகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன.

TAMAP இன் பெறுமதிச் சங்கிலி நிபுணரான ஹான் வான் டெ மீரென்டொங்க் (Han van de Meerendonk) கருத்துத் தெரிவிக்கையில், “பல பண்டங்களை பொறுத்தமட்டில், அவற்றினூடாக கிடைக்கும் வருமானத்தின் பெரும் பங்கு இடையீட்டாளர், ஏற்றுமதியாளர் அல்லது பதப்படுத்துநரிடம் தங்கிவிடுவதுடன், விவசாயியிடம் சென்றடைவதில்லை. விவசாயிகளின் பேரம்பேசல் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பிலும், உயர் வருமானத்தை பெற்றுக் கொள்வது மற்றும் இந்த பெறுமதிச் சங்கிலிகளில் எவ்வாறு பெறுமதி சேர்ப்பது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தோம்” என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இலங்கையின் விவசாயத்துறையை சந்தை-அடிப்படையிலான இயங்கும் துறையாக கட்டியெழுப்புவதற்கு, சந்தை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வழிமுறை ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும். எமது ஆய்வுகளினூடாக அத்தியாவசியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதுடன், வெவ்வேறு சந்தைகளில் காணப்படும் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொணர்ந்துள்ளன” என்றார்.

TAMAP விவசாய பொருளாதார நிபுணரான கலாநிதி. சதுர ரொட்ரிகோ விவரிக்கையில், “ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி மாற்றீடு போன்றவற்றுக்கு காணப்படும் வாய்ப்புகளை ஆராய்வதாக எமது இலக்கு அமைந்திருந்தது. அதன் பிரகாரம் இந்த பெறுமதிச் சங்கிலிகளை நாம் தெரிவு செய்திருந்தோம்” என்றார்.

அவர் தொடர்ந்து விவரிக்கையில், “சம்பந்தப்பட்ட சகல பங்காளர்களுடனும் நாம் உரையாடியிருந்ததுடன், சம்பந்தப்பட்ட குழுநிலை கலந்துரையாடல்களையும் விவசாயிகளுடன் முன்னெடுத்திருந்தோம். பெறுமதிச் சங்கிலிகள் மாறுபட்ட வியாபார வழிவாய்க்கால்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு வியாபார வழிவாய்க்காலும் அதன் பங்காளர்களுக்கு பெறுமதியை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பங்காளரும் பெற்றுக் கொள்ளும் விலை வருமானப் பெறுமதியை பொறுத்து இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எந்த வியாபார வழிவாய்க்கால்களினூடாக விவசாயிக்கு சிறந்த வருமானம் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகின்றது என்பதை கண்டறிய, வெவ்வேறு வியாபார வழிவாய்க்கால்களை ஒப்பிட்டு நோக்க நாம் எதிர்பார்த்தோம்” என்றார்.

எதிர்நோக்கியிருந்த சவால்கள் தொடர்பில் கலாநிதி. ரொட்ரிகோ தெரிவிக்கையில், “சவால்கள் என்பது, வியாபார சூழலை பொறுத்து அமைந்திருக்கும் - இதில் ஒழுங்குபடுத்தல் மற்றும் பின்பற்றல் கட்டமைப்புகளில் காணப்படும் சவால்களும் அடங்குகின்றன. மேலும், பெருமளவு விவசாயிகள் விவசாயத்தை வியாபாரமாக கொண்டிருக்கக்கூடிய அடிப்படை அம்சங்களை கொண்டிருக்காமையினால், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அவர்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.

“ஏற்றுமதி பெறுமதிச் சங்கிலித் தொடர்கள் மற்றும் ஏற்றுமதி சாராத பெறுமதிச் சங்கிலித் தொடர்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் காணப்பட்டன. ஏற்றுமதிச் சங்கிலி தொடர்கள் சாதாரணமாக பதப்படுத்தல், போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளல் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கலாநிதி. ரொட்ரிகோ ஆலோசனை வழங்கையில், “பாரியளவில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார அளவீடுகளை பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், சிறியளவில் ஈடுபடுவோருக்கு அது இயலாத காரியமாக அமைந்துள்ளது. தொழிற்பாட்டு வினைத்திறன் தொடர்பில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். இவர்கள் வணிக ரீதியாக இயங்கும் விவசாயிகள் அல்லர். ஆனாலும், வணிக பெறுமதிச் சங்கிலியில் இவர்கள் உள்வாங்கப்பட வேண்டிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தால், தமது உற்பத்தித்திறனை இவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப மற்றும் மூலோபாய முதலீடுகளினூடாக இதை நிறைவேற்ற முடியும். விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதற்கு காணப்படும் வழிமுறைகளை நாம் இனங்காண வேண்டும்” என்றார்.

இலங்கையின் விவசாயத்துறையை உயர் பெறுமதி வாய்ந்த பெறுமதி சேர் தயாரிப்புகள் பிரிவுக்கு பன்முகப்படுத்த அவசியமான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை இந்த பெறுமதிச் சங்கிலி ஆய்வு கண்டறிதல்கள் வழங்கியுள்ளன. அத்துடன், சிறியளவில் இயங்கும் விவசாயிகள் மற்றும் குறிப்பாக இந்தத் துறைகளில் காணப்படும் பெண்களை சமூகமட்டத்தில் உள்வாங்கி வலிமைப்படுத்துவது பற்றியும் தகவல்களைக் கொண்டுள்ளது.

இந்த பெறுமதிச் சங்கிலி ஆய்வுகளினூடான கண்டறியப்பட்ட விடயங்களை எதிர்காலத்தில் விவசாயத்துறையில் இணைத்துக் கொள்வதற்காக, இலங்கையின் பரந்தளவான தரப்பினர், தனியார் துறை பங்காளர்கள், அபிவிருத்தித் திட்டங்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் போன்ற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் கலாநிதி. ஓலாஃவ் ஹெய்டில்பா (Olaf Heidelbach) கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெறுமதிச் சங்கிலி ஆய்வினூடான கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைப்புகளை, பரந்த விவசாயக் கொள்கையிலும் (ழுயுP) மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து தற்போது தயாரிக்கப்படும் மூலோபாயத்திட்டத்திலும் உள்ளடக்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .