2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அசமந்தமே தொடரும் விபத்துகளுக்கு காரணம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கின் ரயில் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துகளுக்கு ரயில் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில், நேற்று பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த புகையிரதம் மோதியதில் நான்கு பெண்கள் மரணமடைந்திருந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் அண்மைக்காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ரயில் கடவைகளில் பல விபத்துகள் இடம்பெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

“இப்பகுதிகளில் உள்ள பல கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக இருப்பதுடன், பல கடவைகளில் கடவை காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் ஊடாக பயணிப்போர் ரயிலில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகின்றனர்.

“தற்போது வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து கூட பாதுகாப்பற்ற பரயில் கடவையில் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

“குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பல நூற்றுக்கணக்கில் பயணிக்கும் நிலையில் குறித்த பகுதியில், பாதுகாப்பான ரயில் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைவிட்டு வந்ததுடன், அதனை நானும் ரயில் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன்.

“மாவட்டத்தில் இடம்பெற்ற பல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பாதுகாப்பான ரயில் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். குறிப்பாக கடந்த 3ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான பரயில் கடவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

“ஆனால், எந்தவித நடவடிக்கையும் ரயில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மரணித்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்து கொள்வதுடன், இவ்வாறான விபத்துகளை இனிவரும் காலங்களில் தடுக்கும் வகையில் ரயில் திணைக்களம் பாதுகாப்பான பரயில் கடவைகளை அமைப்பதுடன், ரயில் கடவைகளுக்கு நிரந்தமாக கடவைக் காப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

“அத்துடன், ஏ9 வீதியிலும் அண்மைகாலமாக விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி அநாவசியமான உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்“ அவர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .