Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூலை 18 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“எனது மகனை கடத்திச் சென்றவர்கள் இவர்கள் தான் என அடையாளப்படுத்தியபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டபோதும் எதுவித பலனும் இதுவரை கிடைக்கவில்லை” என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“எங்களுடைய பிள்ளைகளையும் உறவுகளையும் தொலைத்த தாய்மார் இன்று 'காணல் நீர்' போன்று என்ன செய்வது என்று தெரியாது நிர்க்கதியாக நிற்கின்றோம். தற்போது காணாமல் போனவர்களுக்கு என பிரதமர் அலுவலகத்தில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எமக்கு குறித்த அலுவலகம் தேவையும் இல்லை விருப்பமும் இல்லை.
வெளிவிவகாரதுறை அமைச்சரை சந்தித்தபோது கூட நாங்கள் கூறினோம் குறித்த அலுவலகம் அங்கு எங்களுக்கு தேவை இல்லை என்று. அதற்கு பதிலளித்த வெளிவிவகார துறை அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் ஐயா மூலமாகாவே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டது என்று. ஆனால், அவர் கூறியது சரியா? பிழையா? என்று எங்களுக்கு தெரியாது.
காணாமல் போன எமது உறவுகள் சார்பாக நாங்கள் கூறுகின்றோம் குறித்த அலுவலகம் எமக்கு தேவையில்லை என்று. ஏன் அதற்குள் வந்து குறித்த அலுவலகம் வேண்டும் என்று கேட்கின்றார்கள்?
இதுவரை காணாமல் போனவர்களுக்காக என்ன செய்தீர்கள். எதையும் செய்த மாதிரி தெரியவில்லை.காணாமல் போன உறவுகளின் தாய்மார்களை விட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமாரே அதிகம் உள்ளனர். தமது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் மனைவிமார் குழந்தைகளுடன் பல்வேறு அசெகளரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அவர்களை எமது அரசியல் தலைமைத்துவங்களுக்கு தெரியவில்லை. அவர்களின் வீடுகளில் கஞ்சி காய்ச்சி குடிக்க கூட வசதி இன்றி தவிக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை எந்தவொரு அரசியல்வாதிகளும் நேரில் சென்று பார்த்ததும் இல்லை. அவர்களின் சுமையை சுமந்ததும் இல்லை. எங்களுடைய வலியை போக்கியதும் கிடையாது. ஒரு சில அரசியல்வாதிகள் எங்களுக்கு பின் வந்தார்கள்.
'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்று கூறப்படுவதை உண்மை என்பதை கூறிக்கொள்ளுகின்றேன். எந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எங்களுக்கு இதுவரை ஒன்றையும் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் வீடு வீடக சென்று பிரசாரம் செய்தோம். அதேபோல், ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டு வர வேண்டும் என்றும் வீடு வீடாக திரிந்தோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அழைத்து தேர்தல் பிரசாரம் செய்தோம்.
ஆனால், கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை. மஹிந்த அரசாங்கம் செய்ததையே மைத்திரி அரசாங்கமும் செய்கின்றது. நூறு நாட்கள் வேளைத்திட்டத்தின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றனர். இன்று சுமார் 18 மாதங்களாகி விட்டது எதனைக்காட்டினார்கள்?
உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்ளுகின்றேன் காணாமல் போன உறவுகளுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தாருங்கள். எதனையும் எமக்கு மறைக்க வேண்டாம். நாங்கள் எல்லா துன்பங்களையும் அனுபவித்து விட்டோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
3 hours ago