2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வவுனியாவில் கொ​ரோனா தடுப்பு முகாம் அமைப்பது இனவாதச் செயற்பாடே’

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி, கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு, இனவாதத்தின் வெளிப்பாடென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இவ்வுயிர்க்கொல்லி வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமென்றும் அவர் கூறினார்.

எனினும், இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் தடுப்பு முகாமை, வடக்கு - கிழக்கை மய்யப்படுத்தி அமைப்பதானது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

“கடந்த வருடம், இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னரும், இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை உடனடியாக வவுனியாவுக்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது. இதற்கு, வவுனியா மக்கள் எதிர்ப்பை காட்டிய போதிலும், அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

“இதேபோன்றதான மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக, தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளைப் பார்க்கும் போது, எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசாங்கம் செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

“இவ்வாறான முகாம்களை ஹம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு அனுப்பி, அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது, எதற்காக வடக்கு - கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது, இன அழிப்புக்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத் தோன்றுகின்றது” என, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .