2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் உணவுக்கு மாதம் 100 மில்லியன் செலவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இறுதிகட்ட போரின்போது  பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்து புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவுக்காக மட்டும் நூறுமில்லியன் ரூபா செலவிடப்படுகிறது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  டியூ.குணசேகர தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைந்துகொள்ள விடுவிக்கப்பட்டுள்ளனர். வளர்முக நாடுகள்ப்ன் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரணடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வரவு செலவுத்திட்டத்தில் வடபகுதியின் அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவின் உதவியுடன் 50ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் காங்கேசன்துறை வரை ரயில் பாதை சீர்செய்யப்படும். அது மட்டுமல்ல பல கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும் 106 ஆண்களும் இவர்களில் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய புனர்வாழ்வு  நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .