2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்தை வழங்க சகலரும் கடமைப்பட்டுள்ளனர் - டியூ

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எதிர்பார்க்கும் விடயமான உரிமை பிரச்சினை மற்றும் சம அந்தஸ்தினை வழங்குவதற்கு நாட்டிலுள்ள சகலரும் கடமைப்பட்டவர்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

உலகத்தில் கிளர்ச்சி நடைபெற்ற நாடுகளில் கைதாகும் போராளிகள் பல ஆண்டுகளாக  முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், நமது நாட்டில் குறுகிய காலத்தில் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு ள்ளமையினால்தான் சர்வதேச ரீதியில் எமக்கு பாராட்டு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த முன்னாள் போராளிகள் 393பேர் இன்று உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய அவர் கூறியதாவது :-

வன்னி மனிதாபிமான நடவடிக்கையை பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராட்டியுள்ளனர்.  வேறு நாடுகளுடன் இந்த நிலமையை இங்கு ஒப்பிட்ட பலர், எமது படையினர் மனிதபிமானம் கொண்டவர்கள் என தெரிவித்துள்ளனர்.கடந்த கால கசப்பான உணர்வுளை மறந்துவிடுவோம். யார் தவறு செய்தார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க மீண்டும் அவ்வாறான தவறுகளை நாம் செய்யாதிருக்க வேண்டும்.

புனர்வாழ்வு நிலையங்களில் வசித்த முன்னாள் போராளிகளில் 75 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்தவித குற்றங்களும் நிரூபிக்கப்படாத ஒரு தொகை போராளிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். சுமார் ஆயிரம் பேருக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவ்வாறு வழக்கு தொடரப்படவுள்ள போராளிகள், சட்டரீதியாக நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் வாதிடவும் வசதிகள் செய்து கொடுப்போம். கல்வியை இடைநிறுத்திய பலர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவும் நல்ல பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தினோம். சிலருக்கு சுயதொழிலுக்குரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .