2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரணைமடுவில் இருந்து குடிதண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை பரிசீலனை செய்க – ஆனந்தசங்கரி

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

கிளிநொச்சியில் நெல் செய்கையாளர்களில் அநேகர் குடியேற்றவாசிகளே. யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் பூநகரி பகுதிக்கும் இரணைமடு குளத்தில் இருந்து குடிதண்ணீர் விநியோகத்திற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி அம் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே இவ்விடயம் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாங்கள் இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இப்பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டவர்களுடனும் இவ்விடயத்தில் நிபுணத்துவம் மிக்கவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டுகின்றேன்.

இரணைமடுக்குளத்தால் நீர்ப்பாசனத்தை அனுபவிக்கின்ற பகுதிகளில் நெற் செய்கை முற்று முழுதாக பாதிக்கப்படும் என்று  நம்புகின்றேன்.

அதன் பயனாக நாடு பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். கிளிநெச்சியின் 80   வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இரணைமடு குளத்து நீரையே நம்பியுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் அறுவடைக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவை நீர்ப்பாசனம் செய்தே பயிரை மீட்டெடுத்து, அறுவடை செய்ய வேண்டிய நிலை. போதிய மழை இன்மையினால் இப்படியான நிலை ஏற்படுவதுண்டு. சிறு போக வேளாண்மை காலத்தில் பயிர் செய்யப்பட வேண்டிய இடமும் பரப்பும் வரையறுக்கப்பட்டு அதற்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இக்காணிகளில் விதைப்பதற்கு உரிமையும் வழங்கப்படும். இரணைமடு நீர் விநியோக பகுதிகளில் விவசாயப் பணிகள் இவ்வாறே இடம்பெறுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் குளத்து நீர் முற்றாக வற்றிப் போவதும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்நீரையே நம்பியுள்ள பயிரைக் காப்பாற்றுவதா அல்லது வேறு தூர பிரதேசங்களில் உள்ள மக்களின் குடி தண்ணீர் தேவையை நிறைவேற்ற நீரை விநியோகிப்பதா என உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படும். இதை ஒரு முன்யோசனையின்றி உருவாக்கப்பட்ட திட்டமாக கருதி மீள் பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

ஜனாதிபதி அவர்களே, யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்மென நீங்கள் நினைத்தால் காலம் சென்ற கௌரவ அருணாசலம் மகாதேவா அவர்களினால் 1947ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யாழ்ப்பாண களப்புத்திட்டத்தை  (Jaffna Lagoon Scheme)அமுல்படுத்துங்கள்.

இத்திட்டத்தை செயல்படுத்த சுண்டிக்குளத்தில் ஒரு நீர் தடுப்பணையையும், தொண்டமனாறு மற்றும் நாவற்குழி ஆகிய இடங்களில் இரு தடுப்பணையையும் அமைப்பதுடன் ஆனையிறவு களப்பையும், வடமராட்சி களப்பையும் இணைக்குமாறு 4- 5 மைல் நீளமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட வேண்டும்.

இத்திட்டத்திற்கு பிரதானமாகத் தேவைப்படுவது அக்கால்வாய் அமைக்க செலவிடப்படும் தொகையே. இத்திட்டம் செயற்படுத்தப்படும் முறையாக இம் மூன்று நீரை கட்டுப்படுத்தும் அணைகள் மழைகாலத்தில் பூட்டப்பட்டிருக்கும். இரணைமடுக் குளத்தில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆனையிறவு களப்பை அடைந்து வடமராட்சி களப்பு ஊடாக ஏனைய பகுதிகளிலும் பரவி நிற்கும். குடாநாட்டில் இருந்து நீர் கடலை நோக்கி செல்லும் போது நீரணையின் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் இம்மூன்று இடங்களினாலும் வெளியேறிச் செல்லும். இவ்வழியை மீண்டும் மீண்டும் 8 - 10 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படுத்தினால் பிரயோசனமற்றுள்ள பிரதேசங்கள் வளம் பெறுவதுடன் உப்பு நீர் உள்ள கிணறுகளும் நன்னீராக வாய்ப்புள்ளது. இது நிபுணர்களின் கருத்தேயன்றி எனது கருத்தல்ல.

அவ்வாறே குடாநாட்டு பிரதேசம் முழுவதையும் கமச் செய்கைக்கு பிரயோசனப்படுத்துவதோடு கிணறுகளிலும் நன்னீரைப் பெறலாம்.

இத்திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தில் சிரேஸ்ட பதில் பணிப்பளராக கடமையாற்றியவரால் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அவரே காலஞ்சென்ற எஸ். ஆறுமுகம். இன்று இத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிபுணத்துவத்தை அறிந்துள்ளவர் ஆறுமுகத்துடன் பணியாற்றிய D.L.O. மென்டிஸ் ஆவார். தயவு செய்து இரணைமடுவில் இருந்து குடிநீர் பெறும் திட்டத்தை நிறுத்தி ஆறுமுகம் அவர்களின் திட்டத்தை மென்டிஸ் அவர்களுடனும் ஏனைய நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து பரிசீலிக்கவும். – என்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .