2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னார் மாந்தை மேற்கில் நீதியமைச்சின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான நீதியமைச்சின் செயற்றிட்டத்தின் ஊடாக நடத்தும் நடமாடும் சேவை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் 28ஆம் திகதியும் மடு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் 29ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக நீதியமைச்சின் ஆலோசகர் எம்.திருநாவுக்கரசு இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலாளர் ஏ.நிக்கலஸ்பிள்ளை தலைமையில் நடைபெறும் இந்த நடமாடும் சேவையானது, மாந்தை மேற்கு செயலகப் பிரிவில் இலுப்பக்கடவை கனிஷ்ட வித்தியாலயத்திலும் மடு பிரதேச செயலகப் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடமாடும் சேவையூடாக சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ள அதேவேளை, யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின்  பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், விவாகப் பிரதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக இலவசமாக புகைப்படம் எடுக்கப்படுவதுடன்,  விண்ணப்பப் பத்திரங்களுக்கான முத்திரைகளும் இலவசமாக  வழங்கப்படும் எனவும் எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், தன்னுடன்  பதிவாளர் நாயகம் ஈ.ஏ.குணசேகர, மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர், நீதியமைச்சின் ஆலோசகர்  ஜனகரணதுங்க மற்றும் ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் திருமதி அபயவிக்கிரம ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதியமைச்சின் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டம் நடத்தும் மேற்படி நடமாடும் சேவைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .