2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிவாரணப் பொருட்களை குஞ்சுக்குளம் கிராம மக்கள் திருப்பி ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


அண்மையில் பெய்த கடும் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மன்னார், குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குஞ்சுக்குளம் கிராமத்தினதும்; அங்குள்ள மாதா கிராமம், பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களிலுள்ள  மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட ஒருதொகை உலர் உணவுப் பொருட்களை நேற்று வியாழக்கிழமை
மன்னார் மாவட்ட செயலகத்தில் திருப்பி ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் இவர்கள் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மன்னார் மாவட்டத்தின் குஞ்சுக்குளம் கிராமமும் ஏனைய கிராமங்களான மாதா கிராமம், பெரியமுறிப்பு கிராமங்களானது  மன்னார் - வவுனியா பிரதான பாதையிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில்  தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு கிராமமாகும்.

குஞ்சுக்குளம் பாலமானது இக்கிராமத்திற்கான பிரதான நுழைவாயிலாக இருப்பதுடன், இதுவொரு வரலாற்று முக்கியத்துவமானதாகவும் இருக்கின்றது.

அருவி ஆறானது பெருக்கெடுத்து ஓடும்போது இப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுவிடுகின்றது.
இவ்வேளைகளில் நாம் வேப்பங்குள பாதையை பயன்படுத்துகின்றோம். ஆயினும் 26 கிலோமீற்றர் தூரம் கொண்ட இப்பாதையானது பாதுகாப்பற்ற காட்டு வழி பாதையாகும். வெள்ளத்தின் நீர்மட்டம் அதிகமாகும்போது இப்பாதையும் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

இந்நிலையில்; இக்கிராமத்திற்கான அனைத்துப் பாதைகளும் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் நிர்க்கதியாகி நிற்க நேரிடுகின்றது.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின்போது எமது கிராமம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. இதனால் கடந்த  23ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை எமது கிராமத்தில்  வெளித்தொடர்புகள் அனைத்தும்  முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.

250 குடும்பங்கள் நிர்க்கதியாகி நின்ற அதேவேளை மருத்துவ, தொடர்பாடல் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுமின்றி நின்றதோடு  ஒருநேர உணவு கூடவின்றி பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தோம்.

இவ்வேளையில் எமக்கு எந்த வகையான உதவிகளும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ கிடைக்கப் பெறவில்லை. இதற்கான காரணமும் என்னவென்று எமக்கு தெரியவில்லை.

இதேவேளை, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல படகுகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டதாக பல பத்திரிகைகள் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட்டிருந்தது எமக்கு இன்னும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

மன்னார் மாவட்டத்தை பார்வையிட வந்த  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கூட குஞ்சுக்குள பிரதான பாலத்தை மட்டும் பார்வையிட்டு சென்றிருக்கின்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வேண்டியவர் ஏன் பாலத்தை மட்டும் பார்வையிட்டாரென்பதும் ஓர் ஆச்சரியமாகவே இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெள்ள அனர்த்தமென்பது புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளத்தால் அதிகளவாக பாதிக்கப்படுவது எமது கிராமமாகும்.  இதற்கு கடந்த கால வரலாற்று பதிவுகள் சான்றாகும்.

இதுவரையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எமது கிராமத்திற்கு வராததன் பின்னணி என்ன?  இதில் ஏதும் பிரிவினைவாத செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என்று சிந்திக்க வைக்கின்றது.

கடந்த மாதமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நாம் எமது பங்குத்தந்தையினூடாக பலரிடமும் அவசர உதவிகளை செய்யுமாறு தொலைபேசி மூலம் கேட்டிருந்தோம்.

இதன் பலனாக மடு உதவி அரசாங்க அதிபரின் பணிப்பிற்கமைய மன்னார் மேலதிக அரசாங்க அதிபரால் படகுகளின் மூலம் ஒருதொகுதி உணவுப் பெருட்கள் அரிப்பு கிராமம்வரை அனுப்பிவைப்பதாக கூறப்பட்டது.

நாம் 5 உழவு இயந்திரங்களின் உதவியோடு பலத்த சிரமங்களுக்கு மத்தியில் சிதைவடைந்து கிடந்த காட்டுப் பாதையை துப்பரவு செய்து கிட்டத்தட்ட 7 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் அரிப்பு கிராமத்திற்கு சென்றோம். அங்கும் எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

250 குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுக்குமாறு எமக்கு  வழங்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு,

அரிசி 750 கிலோகிராம், பருப்பு 25 கிலோகிராம், மீன் ரின் 50, நெத்தலி 50 கிலோகிராம், உருளைக்கிழங்;கு 45 கிலோ கிராம், வெங்காயம் 30 கிலோகிராம், உப்பு 40 பைக்கட்டுக்கள், செஞ்சிலுவைச்சங்க பொதி 30 (துவாய், பற்பசை, சவர்க்காரம், சம்போ  போன்ற பொருட்கள்) ஆகும்.

நாம் எவ்வாறு இவற்றை மக்களுக்கு கொடுப்பது? இவற்றை வாங்கி   தம்பட்டம் காட்டுவதை விட வாங்காமலிருப்பது மேலென்பது எமது மக்களின் கருத்து.

இறுதியாக நாம் உரிய அதிகாரிகளிடம் கேட்பது என்னவென்றால் நாமும் இலங்கையின் பிரஜைகளாக இருப்பதால் பாராபட்சமற்ற முறையில் உரிய அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை பகிர வேண்டும்.
அனர்த்தம் கூடிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். எமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக போக்குவரத்துப் பாதைகள் மிக விரைவில் புனரமைக்கப்பட்டு பிரதான பாலத்தையும் கட்ட ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

இதனால் வெறும் பிரசாரத்தை மட்டுமே கருத்திற்கொண்டு அதிகாரிகளினால் எமக்கு வழங்கப்பட்ட பற்றாக்குறையான உணவு பொருட்களை நாம் உங்களிடமே கையளிக்கின்றோம்.

இது பாதிக்கப்பட்ட மக்களின் தேவை கருதி எமக்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அல்ல. வெறும் அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொய் நாடகமாகும்.

தயவுசெய்து இனி இவ்வாறான கண்துடைப்பு செயற்பாடுகளை நிறுத்தி உரிய அரசாங்க அதிகாரிகள் மக்களின் நலன் கருதி தங்கள் கருமங்களை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் உரிமை ரீதியாகவும் பாதிக்கப்பட்டு ஏக்கத்தோடு வாழும் எமக்கு விடிவு கிடைக்குமென நம்புகின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கேட்டபோது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களுக்கு பாரிய கஷ்டத்தின் மத்தியில் படகுகள் மூலம் நிவாரணங்களை கொண்டு சென்று ஒப்படைத்தோம்.

இதன்போது பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். இவ் உலர் உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட சில தினங்களுக்கே வழங்கப்பட்டன.

இப்பொருட்கள் திருப்பியனுப்பப்பட்டமை எமக்கும் மனிதாபிமான பணியில் ஈடுபடும் சக அதிகாரிகளுக்கும் மன வேதனையளிக்கின்றதெனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .