2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முசலியில் பல கிராமங்களுக்கு போக்குவரத்து இல்லாததால் மக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெனி

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கிராமங்களில் போக்குவரத்துச் சேவை இல்லாததன் காரணமாக அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தெரிவித்தார்.

முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் மாதாந்தக் குழுக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது முசலியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதில் உள்வாங்கப்பட்ட கிராமங்களான அரிப்பு, கொண்டச்சிக்குடா, சவேரியார்புரம்,  சிலாவத்துறை, சிறிபொற்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

நாளாந்தம் இப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருப்பதை பிரஜைகள் குழு அவதானித்துக் கொண்டிருப்பதோடு, மக்களும் பல தடவைகள் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும்; இன்னமும் அதிகாரிகள் மக்களை புறக்கணித்துக்கொண்டிருப்பதாக  முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் தெரிவித்தார்.

குறிப்பாக மன்னாரிலிருந்து அரிப்பு கிராமத்திற்கு இ.போ.ச.பஸ் சேவையானது காலையில் 7.45 மணிக்கு முருங்கனூடாக சிலாவத்துறையை வந்தடைந்து மீண்டும் கொக்குப்படையான்வரை சென்று திரும்புவது தான் வழமையான சேவையாக காணப்பட்டது.

இருந்தபோதிலும், கடந்த பலகாலமாக இச்சேவையானது புறக்கணிக்கப்பட்ட நிலையில் முசலி பிரதேச செயலகத்துடன் மக்களை இறக்கி விட்டுச் செல்லக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது.

இதனால் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்களென பலரும் 3 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஆரம்பத்தில் பாதை சீராக இல்லையென அதிகாரிகளினால் கூறப்பட்டபோதிலும், தற்போது சரியான முறையில் பாதை சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் தங்களது தேவை கருதி எங்கு சென்றாலும் முச்சக்கரவண்டியை நம்பிச்  செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

குறிப்பாக சிலாவத்துறையிலிருந்து கொண்டச்சிக்குடா கிராமத்திற்கு செல்வதாயின் முச்சக்கரவண்டிக்கு 300 ரூபா கொடுத்து செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து முதலில் மன்னார் போக்குவரத்துச் சபைக்கு முதற்கட்டமாக மனுவொன்றை அனுப்பிவைத்தது. இதற்குரிய பதிலை எமது பிரஜைகள் குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கான சரியான பதில் கிடைக்காவிடின் போராட்டத்தில் குதிப்போமெனவும் அவர் கூறினார்.

எனவே, மக்களின் நலன் கருதி இதற்கான சரியான தீர்வு திட்டத்தினை மக்களுக்கு வழங்குமாறு முசலி பிரதேச பிரஜைகள் குழுவூடாக கேட்டுக்கொள்ளுகின்றோமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .